50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
Finance Secretary Siddique ; தமிழகத்தின் கடன் சுமை அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் குறைக்க முடியாது என தமிழக பட்ஜெட்டிற்கு பிறகு நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்- நிதி நிலைமை என்ன.?
தமிழகத்திலும் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்ற நிலையில், தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகளும் இடம்பிடித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் திட்டங்கள் தொடர்பாகவும், நிதி நிலைமை தொடர்பாகவும் நிதித்துறை செயலாளர் சித்திக் செய்தியாளர்களிடம் விளக்கினார். தமிழ்நாட்டின் நிதி நிலைமை இக்கட்டான சூழலில் உள்ளதாக கூறினார். தமிழகத்தில் தற்பொழுது இருக்கும் நிதிப் பிரச்னையை ஒரே ஆண்டில் சரி செய்ய முடியாது. குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என தெரிவித்தார்.
வரவு என்ன.?செலவு என்ன.?
வரவுகளை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்தாக தெரிவித்த அவர், குறிப்பாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2026-27 நிதியாண்டில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 2026-27 நிதியாண்டில் 27 ஆயிரத்து 835 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடான 27 ஆயிரத்து 704 கோடி ரூபாயைவிட சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
50 ஆண்டுகள் ஆனாலும் கடன் குறையாது
தொடர்ந்து பேசிய அவர், வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடன் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குறைக்க முடியாது. தமிழக அரசின் கடன் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே தான் செல்லும் எனவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்திற்கு குறைவாக தான் கடன் வாங்க முடியும் எனவும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் கடன் வாங்க முடியாது எனவும் சித்திக் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















