TN Agri Budget 2025: 50ஆண்டு கால கோரிக்கை; பண்ருட்டி மக்களுக்கு வந்தது விடியல் ; அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

கடலூர்: தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -26 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தியாவில் முந்திரி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகமாக பயிரிடப்படுகிறது. முந்திரி தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு 43 ஆயிரத்து 460 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில், தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும்.
இதனால் முந்திரி சாகுபடி செய்யும் உழவர்களும். அதனைச் சார்ந்த தொழில் செய்யும் கிராமப்புர மக்களும் அதிகளவில் பயனடைவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
அதுபோல தமிழ்நாட்டின் மாநில மரமான பனை சாகுபடியை ஊக்குவிக்க, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ரூ.1 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
நமது மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவும் முக்கியத்துவம் வாய்ந்த, பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நான்கு ஆண்டுகளாகப் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-2026 ஆம் ஆண்டில் பனை சாகுபடியை ஊக்குவிக்க 10 இலட்சம் பனை விதைகள், பனை மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் கூடங்கள், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி ஆகிய இனங்களுக்கு, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி சுற்றுவட்டார கிராமங்களான சாத்திப்பட்டு, மாம்பட்டு, விசூர், பணிக்கங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 32 ஏற்றுமதி சார்ந்த முந்திரி உற்பத்தி அலகுகள்(Production Units), 250 செயலாக்க அலகுகள்(Processing Units) மற்றும் 500-க்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் வேளாண் அமைச்சர் தெரிவித்த நிலையில் பண்ருட்டி பகுதி மக்கள் கூறுகையில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார், இத்தகையை அறிவிப்பு எங்களுக்கு விடியலை தந்துள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

