மேலும் அறிய
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
விவசாயிகள் தெரிவித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விதை நெல்லின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். - என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கலப்பு நெல்
Source : whatsapp
விதை நெல்லில் வெவ்வேறு ரகங்கள் கலப்பு: அறுவடை செய்ய முடியாமல் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு.
கோடை காலத்தில் சுமார் 800 ஏக்கரில் நெல் சாகுபடி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரத்தில் தனியார் கடைகளில் கோடை சாகுபடிக்காக வாங்கப்பட்ட விதை நெல்லில் வெவ்வேறு கால அளவில் விளையும் நெல் ரகங்கள் கலந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் முதிர்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே பயிர்கள் சாய்ந்து, மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் வழக்கமாக கோடை காலத்தில் சுமார் 800 ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். ஆனால், இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிணற்றுப் பாசன வசதி கொண்ட விவசாயிகள் மட்டுமே சுமார் 100 முதல் 300 ஏக்கர் வரை நெல் பயிரிட்டுள்ளனர்.
விதை நெல் வாங்கி பயிரிட்டுள்ளனர்
கோடை சாகுபடிக்கு வேளாண்மைத்துறை மூலம் விதை நெல் வழங்கப்படாத நிலையில், விவசாயிகள் தனியார் கடைகளில் விதை நெல் வாங்கி பயிரிட்டுள்ளனர். என்எல்ஆர், கோ-50, கல்சர் பொன்னி உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. திருப்புவனம் அருகே நெல்முடிகரை குரூப் பகுதியில் மட்டும் சுமார் 100 ஏக்கரில் என்எல்ஆர் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது. 120 நாட்களில் அறுவடைக்கு வரும் இந்தப் பயிரை விவசாயிகள் தற்போது அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தனியார் கடைகளில் வாங்கிய விதை நெல்லில் 120 நாள் பயிருடன் சுமார் 160 நாட்களில் விளையும் நெல் கலந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் 120 நாள் பயிர்கள் முதிர்ந்து சாய்ந்துள்ள நிலையில், 160 நாள் பயிர்கள் இன்னும் முழுமையாக விளையாததால் ஒரே நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு எப்போது தெரியும்?
இயந்திரம் மூலம் அறுவடை செய்யும்போது விளைந்த நெல், விளையாத நெற்கதிர்கள் மற்றும் வைக்கோல் ஆகியவை முறையாகப் பிரியாமல் ஒன்றாகச் சேர்ந்து விடுவதாகவும், இதனால் இயந்திர அறுவடையிலும் பாதிப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கூலி ஆட்களை வைத்து அறுவடை செய்ய முயன்றாலும் பயிர்கள் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருப்பதால் முழுமையாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை சுமார் 20 ஏக்கர் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மற்ற விவசாயிகளும் அறுவடையைத் தொடங்கும்போதுதான் இதுபோன்ற பாதிப்பு தெரியவரும் என கூறப்படுகிறது.
ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் தெரிவித்துள்ள புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விதை நெல்லின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், விதை விற்பனை நிலையங்களில் விதைச்சான்று, தரச்சான்று, ரக விவரம், தொகுதி எண் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















