திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயத்துடன் தேனீ வளர்ப்பை இணைத்து மேற்கொள்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதன் மூலம் விளைச்சலையும் மேம்படுத்த முடியும்.

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்துள்ள பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில், திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது. “தேசிய தேனீக்கள் தினம் – தேனீயை பாதுகாப்போம், பூமியை காப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேனீக்களின் பங்கு குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தின் தலைவர் பொதுப்பணி திலகம் தலைமையிலும், இணை இயக்குநர் பயிற்சி இலக்கு பூபதியின் தொழில்நுட்ப ஆலோசனையின்படியும் பயிற்சி நடைபெற்றது. இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி தொடக்க உரையாற்றினார்.
தேனீக்கள் இயற்கையின் முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர்களாக விளங்குகின்றன. பல்வேறு பயிர்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்கள் முக்கியப் பங்காற்றுவதால், வேளாண் உற்பத்தி மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதில் அவற்றின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தேனீக்களின் எண்ணிக்கை குறைவது சுற்றுச்சூழல் சமநிலையையும் வேளாண் உற்பத்தியையும் பாதிக்கக்கூடும் என்பதால், தேனீக்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனின் மருத்துவப் பயன்கள், தேனீக்களின் வாழ்க்கைச் சுழற்சி, பல்வேறு வகையான தேனீக்கள், தேனீக் கூட்டங்களை முறையாக நிர்வகிக்கும் வழிமுறைகள், தேனீக்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொழில்நுட்ப வல்லுநரும் உதவிப் பேராசிரியருமான பாரதிதாசன், தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப உரையாற்றினார். தேன் அறுவடைக்குப் பிறகு அதன் தரத்தை பாதுகாப்பது, தேனில் மதிப்பு கூட்டுதல், மதிப்புக்கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்தல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
மேலும், தேன் அறுவடை செய்யும் போது விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தேனீக் கூட்டுகளை கையாளும் முறை, பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துதல், தேன் சேகரிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை நடைமுறையில் விளக்கப்பட்டன.
பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி வழிகாட்டுதலுடன் இணை ஆராய்ச்சியாளர்கள் இமயா, அருணாதேவி மற்றும் ரமா பிரபா நளினி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விவசாயத்துடன் தேனீ வளர்ப்பை இணைத்து மேற்கொள்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளதுடன், பயிர்களின் மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதன் மூலம் விளைச்சலையும் மேம்படுத்த முடியும். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு ஒரு துணைத் தொழிலாகவும் வருமானம் ஈட்டும் வாய்ப்பாகவும் அமையும் என பயிற்சியில் வலியுறுத்தப்பட்டது.
பயிற்சியின் நிறைவில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேனீக்களை பாதுகாப்பதன் மூலம் வேளாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒருங்கிணைந்து பாதுகாக்க முடியும் என்ற விழிப்புணர்வுடன் பயிற்சி நிறைவடைந்தது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















