காஞ்சிபுரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: விவசாயிகள் கவனத்திற்கு! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
"ஆடு மற்றும் மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள், கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு "

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம். 8-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி. மாவட்ட ஆட்சித்தலைவர்கலைச்செல்வி மோகன், தகவல்.
கோமாரி நோய்
கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளில் எடை குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பெரும்பான்மையான கால்நடை உரிமையாளர்கள் சிறுகுறு விவசாயிகளாக உள்ளதால், கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பை தாங்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே, கால்நடைகளை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.
தடுப்பூசி மிக அவசியம்:
மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள் சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின்மூலம் பரவும் தன்மைக்கொண்டது. மேலும், இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
காஞ்சிபுரத்தில் தடுப்பூசி முகாம்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த 163750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 29.12.2025 அன்று முதல் துவங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியினை 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைப்பெறும் முகாம்களில், தவறாது போட்டுக் கொண்டு தங்களது கால்நடைகளை கொடிய நோயான கோமாரி நோயிலிருந்து தற்காத்துகொள்ள கால்நடை வளர்ப்போர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.





















