அதிக லாபம் தரும் கொய்யா சாகுபடி... தஞ்சை விவசாயிகள் ஆர்வம்
நெல், கடலை போன்ற சாகுபடிகள் செய்து வந்த விவசாயிகள் தற்போது பல்வேறு மாற்றுப்பயிர்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் கொய்யா மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: கொய்யா சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் திருக்கானூர்பட்டி, தெற்குநத்தம், மருங்குளம் உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் கொய்யா மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பராமரிப்பும் குறைவு என்பதால் கொய்யா சாகுபடியை அதிகளவில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
சிறு அளவில் உள்ள நாட்டுக்கொய்யாவுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. மக்கள் இதை விரும்பி வாங்கி சாப்பிடுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு இதை வாங்கி செல்கின்றனர். நெல், கடலை போன்ற சாகுபடிகள் செய்து வந்த விவசாயிகள் தற்போது பல்வேறு மாற்றுப்பயிர்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் கொய்யா மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் போன்ற விளைச்சல் அதிகம் கிடைக்கக்கூடிய ரகங்களாக இருந்தாலும் நாட்டுரக கொய்யாதான் விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது. நாட்டுக்கொய்யாக்கள் அளவில் சிறியதாக இருக்கும். அதிகபட்சம் 200 கிராமிற்கு மேல் வளராது என்பதால் விற்பனைக்கு அதிகளவில் வாங்கிச் செல்வார்கள்.
நாட்டு ரக கொய்யாக்கள் நன்றாக கிளைவிட்டு வளரும் என்பதால் இதை வளர்ப்பதற்கு அதிக இடம் தேவை. அதனால் நாற்று நடும்போதே 15 அடிக்கு 15 அடி இடைவெளி விட்டுதான் நடவேண்டும். இயற்கை முறையில் கொய்யா வளர்க்கும்போது நாற்று நடுவதற்காக குழி தோண்டும்போதே அந்தக்குழியில் தொழு உரம் இட்டு நாற்றை நட வேண்டும். இப்படி நடும்போது வேருக்கு தேவையான சத்துக்கள் இயற்கையாகவே மரத்திற்கு கிடைக்கும். செடி ஒன்றரை அடி வந்த பிறகு கவாத்து பணியை தொடங்கிவிட வேண்டும். செடியின் பக்கக் கிளைகளை வெட்டிவிட்டு மரம் வளருவதற்கு ஏதுவாக கவாத்து செய்ய வேண்டும். பொதுவாக கவாத்து பணியை ஆண்டுக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு இரண்டு முறை பலன் தரக்கூடிய கொய்யா மரத்தில் காய்ப்புகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கவாத்து செய்தால் மரத்தில் பிஞ்சுகள் உதிராமல் காய் அதிகம் பிடிக்கும். கொய்யா மரத்தைப் பொறுத்தவரை நாற்றுகள் நட்டு ஐந்து மாதத்தில் இருந்தே பூக்கள் பூக்க தொடங்கிவிடும். அப்படி பூக்கிற பூக்களை உதிர்த்து விட வேண்டும். இப்படியே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பூக்களை உதிர்த்து, கவாத்து பணிகளை சரியாக செய்து வந்தால் மரம் நல்ல பருமனாக வளரும். மகசூலும் அதிகளவில் கிடைக்கும். கொய்யா மரம் காய் கொடுக்கும் வரை 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு தொடங்கி மரத்தில் பழங்கள் அதிகம் வந்தவுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
கொய்யா மரத்தை பொறுத்தவரை அதிகபடியான பராமரிப்பு தேவையில்லை. பராமரிப்பு செலவும் மிக குறைவுதான். வருடத்திற்கு இரண்டு முறை களை பறிப்பதற்கும், உரம் போடுவதற்கும் மட்டுமே செலவாகிறது. ஆண்டு முழுவதுமே பலன் தரக்கூடிய மரமாக கொய்யா உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 2500 கிலோ வரை கிடைக்கிறது. ஒரு கிலோ கொய்யாப்பழங்கள் 30 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் விற்றாலும் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் வாகனச் செலவும் குறைகிறது. இதனால் நாட்டு கொய்யா சாகுபடியில் திருக்கானூர்பட்டி, தெற்கு நத்தம், மருங்குளம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.
Before You Go
Chicken Fertilizer : இறந்த கோழிகளை என்ன செய்வது ? மாத்தி யோசித்த விவசாயி… கொழிக்கும் வளங்கள்
ட்ரெண்டிங் செய்திகள்





















