![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
கடைசி தேதி வரை காத்திருக்காமல்..பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள் - செங்கை ஆட்சியர் சொன்ன தகவல்
நவரை பருவ நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.512.25, மணிலா பயிருக்கு ரூ.456, மற்றும் கரும்பு பயிருக்கு 5 சதவீதம் காப்பீட்டு கட்டணம் ரூ.2900 ஏக்கருக்கு செலுத்தினால் போதுமானது.
![கடைசி தேதி வரை காத்திருக்காமல்..பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள் - செங்கை ஆட்சியர் சொன்ன தகவல் Chengalpattu Farmers are requested to insure the notified samba crops in advance instead of waiting for the last date for insuring them TNN கடைசி தேதி வரை காத்திருக்காமல்..பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள் - செங்கை ஆட்சியர் சொன்ன தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/26/5ec5c456d3e19cd616ab12998d4323e21698284399809666_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சம்பா (சிறப்பு) மற்றும் நவரை (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் பியூச்சர் ஜெனரலி காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில், விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி வரை காத்திருக்காமல்
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது : தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் II சம்பா (சிறப்பு) பருவத்திலும், நெல் III, மணிலா மற்றும் கரும்பு பயிர்கள் நவரை(ராபி) பருவத்திலும் அறிவிக்க செய்யப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2023 நவம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும், நவரை பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெல், நிலக்கடலை, 2024 ஜனவரி 31 ஆம் தேதிக்குள்ளும், கரும்பு 2024 மார்ச் 30 ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கட்டணம் எவ்வளவு ?
நெல் (சம்பா) நெல் (நவரை) மணிலா பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீடு கட்டணமாக சம்பா பருவ நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.512.25 செலுத்தினால் போதுமானது. நவரை பருவ நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.512.25, மணிலா பயிருக்கு ரூ.456, மற்றும் கரும்பு பயிருக்கு 5 சதவீதம் காப்பீட்டு கட்டணம் ரூ.2900 ஏக்கருக்கு செலுத்தினால் போதுமானது.
எவ்வாறு பயிர் காப்பீடு செய்வது ?
எனவே சம்பா மற்றும் நவரை பருவங்களில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ/தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்)/ தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள ‘விவசாயிகள் கார்னரில்’ (www.pmfby.gov.in) நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழி விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் / இ-அடங்கல்/ விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் தகவலை எங்கே பெற்றுக் கொள்வது
விவசாயிகள் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)