புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலையாக, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என 8 பேரிடம் ரூ.15.93 லட்சம் மோசடி.

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பல்களால் 8 பேர் மொத்தம் ரூ.15.93 லட்சம் இழந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த ஒரு நபரை, டெலிகிராம் செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் அணுகியுள்ளார். வீட்டில் இருந்தபடியே பகுதிநேர வேலையாக, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 12 ஆயிரத்து 477 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. இதேபோல், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் ஆன்லைனில் துணி ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் தொடர்பு கொண்ட மர்மநபர், டெலிவரி பார்ட்னர் பேசுவதாக கூறி முன்பணம் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதையடுத்து அப்பெண் மர்ம நபருக்கு ரூ.1.97 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால், ஆர்டர் செய்த பொருள் எதுவும் வரவில்லை.
லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 1 லட்சத்து 15 ஆயிரம், கோரிமேட்டைச் சேர்ந்தவர் 37 ஆயிரத்து 800, கொத்தபுரிநத்தத்தை சேர்ந்தவர் 61 ஆயிரம், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 34 ஆயிரத்து 600, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 15 ஆயிரத்து 683, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 20 ஆயிரத்து 900 என 8 பேர் 15 லட்சத்து 93 ஆயிரத்து 860 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை
புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்கே, எப்படி புகார் அளிப்பது?
இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:
- தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
- புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
- மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
- இணைய தளம்: www.cybercrime.gov.in
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம். pu





















