விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
நாகர்கோவிலில் விசாரணை கைதி உயிரிழந்த நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் பகீர் கிளப்பியுள்ளனர். உடம்பில் காயம் இருப்பதாகவும் போலீசார் அடித்தே கொன்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தாமரை குளம் பகுதியில் கடையில் குட்கா விற்பனை செய்ததாக அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர் சபரிவர்மனை தென் தாமரை குளம் போலீசார் கைது செய்தனர். அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் ஜெயிலில் கடந்த 9 ஆம் தேதி அடைத்தனர். இந்தநிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக சொன்னது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்தது.
மாற்றுத்திறனாளியான சபரிவர்மனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி குடும்பத்தினரும், ஊர் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். சபரிவர்மனின் உடம்பில் காயங்கள் இருப்பதாகவும், ஜெயிலில் இருந்த அவரை அடித்து கொலை செய்துள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சபரிவர்மனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “மாரடைப்பு ஏற்பட்டு அவன் செத்துட்டான். அவனை பார்க்க முடியாது என்று சிரித்து கொண்டே சொல்கிறார்கள்” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் ஜெயிலில் சென்று சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகிறார். சபரிவர்மன் மரணத்தின் உண்மைக் காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறிய வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்புவனம் அஜித்குமாரின் லாக்-அப் மரணத்தைப் போன்று இன்னொரு அப்பாவியை இழக்க தமிழகம் தயாராக இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















