ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?
”பேனர்ல கூட என் ஃபோட்டோ போட மாட்றீங்க, நான் கூட்டத்துக்கு வரலனா கூட யாரும் எதுவும் கேட்குறது இல்ல” என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிமுக நிர்வாகிகளிடம் நேரடியாகவே ஆத்திரம் பொங்க பேசியுள்ளார். செங்கோட்டையன், கோகுல இந்திரா என முன்னாள் அமைச்சர்களே அதிருப்தியை வெளிப்படையாகவே சொல்லி வருவது உட்கட்சி மோதலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது
தேர்தலுக்காக கட்சியை மீண்டும் form-க்கு கொண்டு வருவதற்காக மாவட்டந்தோறும் கள ஆய்வு கூட்டங்களை நடத்த உத்தரவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். ஆனால் கள ஆய்வு கூட்டங்கள் அனைத்தும் உட்கட்சி பூசலால் மோதலிலேயே முடிந்தன. தள்ளுமுள்ளு தொடங்கி கைக்கலப்பு வரை நடைபெற்று நாற்காலிகள் தூக்கி வீசப்படுவதுமாக இருந்த நிலையில், தற்காலிகமாக கள ஆய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தென் சென்னையில் மீண்டும் தொடங்கிய கள ஆய்வு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டார். அப்போது பேனர்களிலும் நோட்டீஸ்களிலும் தன்னுடைய பெயரும் ஃபோட்டோ போடவில்லை என ஆத்திரம் பொங்க பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் கோகுல இந்திரா ‘ இந்த கூட்டத்திற்கு ஏன் வரவில்லை என்று வட்டச் செயலாளரோ, பகுதி செயலாளரோ உள்ளிட்ட யாருமே என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நான் என்ன மெஜெஜர் கொடுக்கும் அளவிலா கட்சியில் இருக்கிறேன்?, பலர் என்னை பார்த்து வணக்கம் செய்ய பயப்படுகிறார்கள், சிலர் என்னுடைய பெயரை பேனரில் போடவும், என்னுடைய புகைப்படத்தை கட்சி நிகழ்ச்சியில் பயன்படுத்தவுமே பயப்படுகிறார்கள், இதை தவிர்க்க வேண்டும். யார் வேண்டுமெனாலும் இந்த தொகுதியின் எம்.எல்.ஏ வேட்பாளராக வரலாம், யாரை வேண்டுமானாலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யலாம், தென் சென்னை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பிறகு பலர் என்னை அழைத்து பேசினார். ஆனால், என்னால் மத்திய சென்னை தொகுதி உள்ளிட்ட எங்கும் எந்தழ் பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக ரொம்ப டீசண்டா ஒதுங்கிட்டேன். நான் யாரையும் தொந்தரவு செய்வதில்லை, நான் குருப்பிசம் செய்வதும் இல்லை. மாவட்ட செயலாளருக்கு நானே தொலைப்பேசியில் அழைத்து பேசினேன். நான் கேட்பது அடிப்படை மரியாதைதான் வேறு எதுவும் இல்லை. என் பெயரை போடாமல் தவிர்க்க வட்டச் செயலாளருக்கு என்ன நிர்பந்தம் ? ஏன் என் புகைப்படம் போடவில்லை?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை மூத்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா உள்ளிட்டோர் முன்னிலையிலேயே கோகுலா இந்திரா கொட்டித் தீர்த்தார்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடர்பாக இபிஎஸ்-க்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் கோகுல இந்திராவும் தன் பங்கிற்கு தனது ஆத்திரத்தை நிர்வாகிகள் மத்தியில் கொட்டியிருப்பது கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
கோகுல இந்திரா விவகாரம் பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, ஏதாவது குறை இருந்தால் பொதுச்செயலாளரிடம் நேரடியாக சொல்ல வேண்டும் என அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதிமுகவின் முக்கிய புள்ளிகளே இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருவது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.





















