சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அணி இன்று முக்கிய முடிவெடுக்கவுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் தூக்கியடித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக, அந்த வகையில் திமுக 73 இடங்களில் வெற்றி பெற்று 2 வது இடத்திலும், 53 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி 3வது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது தவெக.
இந்த நிலையில் திடீரென அதிமுகவில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியானது உருவானது. 25 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் தனி அணியாக செயல்பட தொடங்கினர். அடுத்தாக தவெகவிற்கு ஆதரவும் வெளிப்படையாக கூறினார்கள். இதுமட்டுமில்லாமல் தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணியை ஒரு அணியும் நியமிக்க கோரி கடிதம் கொடுத்தது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெட்ட வெளிச்சமானது. இதற்கு மத்தியில் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டார்.
ஆனால் தவெகவிற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து செயல்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக சட்டசபையில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடுத்தாக ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்த நிலையில், தவெகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 25 எம்எல்ஏக்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு சபநாயகரிடம் கடிதம் கொடுத்தது.
அடுத்தாக தனி அணியாக செயல்பட்ட எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், காமராஜ், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 மாவட்ட செயலாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டது. இதுமட்டுமில்லாமல் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் சி.வி.சண்முகம் தரப்பு அடுத்தாக என்ன செய்யலாம் என நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தியது. இதில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு விடுத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது.
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தனது ஆதரவை காட்ட காய் நகர்த்தி வருகிறார். மேலும் சபாநாயகர் 25 எம்எல்ஏக்களின் பதவிகளை நீக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடவும் இபிஎஸ் தரப்பு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி மோதிக்கொள்ளும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















