Annamalai New Party | "ஜூன் 5 முக்கிய அறிவிப்பு" அண்ணாமலை வைரல் பதிவு புதிய கட்சி தொடங்குகிறாரா?
அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியாக பேச்சு அடிபடும் நிலையில், ஜூன் 5-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை பாஜக மாநில தலைவராக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக-வுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 11 சதவிகித வாக்குகள் இருப்பதை நிரூபித்துக் காட்டிய பிறகும், அடுத்த ஆண்டே மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வந்த பிறகு, கட்சியில் அவர் ஓரங்கட்டப்படுவதாகவும், அதனால்தான் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு, அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இரண்டு நாள்களுக்கு முன்பகூட டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, தன்னைக் கட்சியில் ஒதுக்குவதாகக் குறிப்பிட்டு தனது விலகல் கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், அன்றைக்கே அமித் ஷாவையும் சந்தித்து அனைத்தையும் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், நயினார் நாகேந்திரன் உட்பட தமிழக மூத்த தலைவர்கள் பலர், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணாமலை தனது பிறந்தநாளான இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில், "நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
இதன்பொருள், புதிய கட்சிக்கான அறிவிப்பை அண்ணாமலை நாளை வெளியிடக்கூடும் என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















