வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவரும் நிலையில், மாணிக்கம் தாகூர் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்து விலகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தையே தொடங்கிவிட்டன.
ஆனால், திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் 28 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்னும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கூட வெளியிடவில்லை.
இதற்கிடையில், வேட்பாளர் தேர்வில் வெளிப்டைத்தன்மை இல்லை எனவும், காசுக்கு சீட் விற்கப்படுவதாகவும் ஜோதிமணி பகீர் கிளப்பினார்.
காசுக்கு சீட் விவகாரம் ராகுல் காந்தி வரைச் சென்றதால் அவர் இதில் கடும் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக டெல்லியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து திடீரென விலகியிருக்கிறார்.
இது தொடர்பான கடிதத்தையும் கார்கேவுக்கு அனுப்பியிருக்கிறார்.
வேட்பாளர் தேர்வு இழுபறியாக இருக்கும் இக்கட்டான சூழலில் மாணிக்கம் தாகூரின் இந்த திடீர் விலகல் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.























