Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
வீ தி லீடர்ஸ் அமைப்பைத் தொடங்கிய பிறகு அண்ணாமலை தொடர்ந்து அமைதியாகவே இருப்பதால் அவரது தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தேசிய அளவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக இருந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை. தேசிய அளவில் தாமரை ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாட்டில் துளிர்கூட விடாமலே இருந்து வருகிறது.
வீ தி லீடர்ஸ்:
அந்த பாஜக-வை தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டு சென்று சேர்த்ததில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தவர் அண்ணாமலை. கட்சியின் மேலிடம் மீதான அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாஜக-வில் இருந்து விலகிய அண்ணாமலை வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
தொடக்கத்தில் அமைப்பாக உருவெடுத்துள்ள இந்த இயக்கம் விரைவில் கட்சியாக உருவெடுத்து 2031 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார். பாஜக-வில் இருந்து விலகிய பிறகு பெரியளவில் பரபரப்பு பேட்டிகள், பத்திரிகையாளர் சந்திப்பில் காணப்படாத அண்ணாமலை வீ தி லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய பிறகு பரபரப்பாக காணப்படுவார் என்று கருதப்பட்டார்.
ஆஃப் மோட் அண்ணாமலை:
ஆனால், தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர், திமுக - தவெக மோதல் என பல்வேறு பரபரப்பான அரசியல் சூழல் அரங்கேறி வந்தபோதும் அண்ணாமலை மிகவும் அமைதியாகவே உள்ளார். தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்தபோது தினசரி தமிழக அரசியலில் பரபரப்பாகவே காணப்பட்ட அண்ணாமலை வீ தி லீடர்ஸ் அமைப்பு தொடங்கியது முதலே ஆஃப் மோடிலே காணப்படுகிறார்.
பல்வேறு பரபரப்பான சூழலிலும் அண்ணாமலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்காததும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. மேலும், அமைப்பிலும் பெரியளவு எந்த ஒரு பெரிய பொறுப்பையும் அவர் வழங்காததும் அவரை நம்பி பாஜக-வில் இருந்து விலகி இவருடன் வந்தவர்களுக்கு அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது.
பாஜக-விற்கு திரும்பும் அண்ணாமலை ஆதரவாளர்கள்:
தமிழக பாஜக-வில் இருந்து விலகி அண்ணாமலைச் சென்ற பிறகு, கட்சியில் இருந்த அவரது எதிர்ப்பாளர்கள் பலரும் தங்களது ஆதிக்கத்தை கட்சியில் நிலைநிறுத்த தொடங்கி வருகின்றனர். கட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் ஆக்டிவ் மோடிற்கு கொண்டு செல்லும் ஒரு நபரை பாஜக தலைமை தேடிக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள கட்சியில் சிலர் முண்டியடித்து வருகின்றனர்.
அண்ணாமலை ஆஃப் மோடிலே இருந்து வரும் சூழலில், அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் பாஜக-விற்கு திரும்பி வருகின்றனர். கட்சியில் பல்வேறு நபர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி கட்சியை பலப்படுத்த தேசிய தலைமை மாநில நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதால் கட்சியின் முக்கிய பொறுப்பை பெற பல நிர்வாகிகளும் முயற்சித்து வருகின்றனர். இதன் காரணமாகவும், அண்ணாமலையை நம்பி வந்த பலரும் மீண்டும் பாஜக பக்கமே திரும்ப தொடங்கியுள்ளனர்.
என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?
ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் பாஜக-விற்கே திரும்பி வரும் நிலையில், அண்ணாமலை நிர்வாகிகளை தக்கவைக்கவும், தனது இயக்கத்தில் இருப்பவர்களின் அதிருப்தியை சமாளிக்கவும் அவர் மீண்டும் பரபரப்பான அரசியலுக்கு திரும்ப வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியான தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் என ஒரு பெரிய பட்டாளம் இருக்கும் சூழலில், அடுத்த தேர்தலில் களமிறங்க தனுஷிம் தயாராக உள்ள நிலையில், அண்ணாமலை அரசியல் களத்தை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
அடுத்து வரும் நாட்களில் அண்ணாமலையின் செயல்பாடுகளை பொறுத்தே அவரது நிர்வாகிகள் வீ தி லீடர்ஸ் அமைப்பிலே இருப்பார்களா? அல்லது பாஜக-விற்கே பல்டி அடிப்பார்களா? என்பது தெரிய வரும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















