CSK: இனிமே போகப்போறது சிங்கப்பாதை! ஆனா.. அடுத்த சீசன்ல இருந்துதான்! ரூட்டை மாத்துமா சிஎஸ்கே?
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் அடுத்த சீசனில் சென்னை அணியின் புது முகத்தை காணலாம் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பல அணிகளுக்கும் பல பாடங்களை கற்பித்து வருகிறது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த தொடர் பலவற்றை கற்றுத் தருகிறது. இதுவரை 8 போட்டிகளில் இந்த தொடரில் ஆடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
தோல்வியில் துவண்டுள்ள சென்னை:
ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது சில அணிகள் மிகவும் மோசமாக தோல்வி அடைவது என்பது இயல்பான ஒன்றே ஆகும். ஆனால், எந்தவித போராட்டமும் இல்லாமல் சரண் அடைவது எந்த ரசிகராலும் ஏற்க முடியாத ஒன்றாகும். அதுவும் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை அணி சொந்த மைதானத்திலும், எதிரணி மைதானத்திலும் போராடாமலே தோற்பது தொடர் கதையாகி வருகிறது.
சொதப்பும் அனுபவசாலிகள்:
இதற்கு முக்கிய காரணமாகவே மாறியிருப்பது அணியின் மூத்த வீரர்களே ஆவார்கள். ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலக கான்வே, ரவீந்திரா, திரிபாதி, தீபக் ஹுடா, விஜய் சங்கர், ஜடேஜா, ஷிவம் துபே என தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். 43 வயதிலும் விளையாடுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட தோனியே மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இவர்களில் துபே மும்பைக்கு எதிராக கடந்த போட்டியில் அரைசதம் விளாசினாலும் அது அணிக்கு பலன் அளிக்கவில்லை. ரவீந்திரா தொடக்கத்தில் சில போட்டிகள் சிறப்பாக ஆடினாலும் அதன்பின்பு அவரும் தடுமாறத் தொடங்கி வருகிறார்.
பாடம் கற்ற சென்னை:
மிடில் ஆர்டர் தற்போது வரை சென்னை அணிக்கு பலவீனமாகவே உள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஆயுஷ் மேரே சிறப்பான தொடக்கம் தர அதை இறுகப்பற்றி மேலே வராத சென்னை 180 ரன்களுக்குள் சுருண்டது. அதன்பின்பு, இலக்கை நோக்கி ஆடிய மும்பை 16வது ஓவரிலே ஆட்டத்தை முடித்து விட்டது.
கடந்த 8 போட்டிகளில் சென்னை அணி ஏராளமான பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களுக்கும், புதுமுக வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர். ஒரே நேரத்தில் இளம் வீரர்களை மொத்தமாக அறிமுகப்படுத்துவது அணிக்கு ஆபத்து என்பது உண்மை என்றாலும், அனுபவ வீரர்களால் அணிக்கு பயன் இல்லை என்றபோது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.
ப்ளே ஆஃப் வாய்ப்பு கேள்வி?
இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் சிஎஸ்கே-வின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலையில், 2 போட்டிகள் தோற்றால் தொடரை விட்டு வெளியேறுவது உறுதியாகும். இந்த சூழலால், சென்னை அணி மறுகட்டமைக்க வேண்டியதன் அவசியத்தை அணி நிர்வாகம் உணர்ந்துள்ளது. இதனால், இளமையும் திறமையும் கொண்ட வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அடுத்த தலைமுறைக்கு சென்னை அணியைத் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பந்துவீச்சிலும் கலீல் அகமது, நூர் அகமது தவிர யாருடைய பந்துவீச்சும் சொல்லிக் கொள்ளும் அளவு இல்லை. அஸ்வின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாதது ரசிகர்களுக்கு வேதனை ஆகும்.
மந்தமான டிக்கெட் விற்பனை:
இதனால், இனி வரும் போட்டிகளில் சென்னை அணியில் ஆயுஷ் மேரே, ஷைக் ரஷீத் போன்ற இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்றே கூறலாம். அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஏராளமான மாற்றங்களை அணி நிர்வாகம் மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.
இதனால், இந்த சீசனில் இல்லாவிட்டாலும் அடுத்த சீசனில் சென்னை அணியின் புது ரூபத்தை காணலாம் என்று ரசி்கர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

