TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
TN RAIN ALERT: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று இரவு முதல் தமிழகத்தில் மழை
வட கிழக்கு பருவமழையின் இறுதி கட்டத்தில் உருவாகியுள்ள புயல் சின்னத்தால் மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்து இன்று (10-01-2026) காலை அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே, முல்லைத்தீவிற்கு (இலங்கை) அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (10-01-2026) மாலை கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை முல்லைத்தீவிற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 கி.மீட்டர் வேகத்தில் தரைக்காற்று
இதன் காரணமாக இன்று (10-01-2026) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (11-01-2026) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மறுநாள (12-01-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
நாளை (11-01-2026): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழகம் மற்றும் புதுவை கடலோரப்பகுதிகள்:
10-01-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-01-2026: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-01-2026: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
10-01-2026: சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11-01-2026 சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே ஆழ் கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுவதாகவும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















