RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழப்புக்கு விராட் கோலிதான் முக்கிய காரணம் என்று சிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் பல்வேறு இந்தியா - பாகிஸ்தான் சண்டைக்கு இடையே நடந்து முடிந்தது. இந்த ஐபிஎல் கோப்பையை 18 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக ஆர்சிபி அணி கைப்பற்றியது.
11 உயிரைப் பறித்த ஆர்சிபி கொண்டாட்டம்:
ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை முன்னிட்டு பெங்களூரில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சியாக மாறியது. இந்த நிகழ்ச்சியில் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்ட நிலையில், முறையான முன்னேற்பாடுகள் செய்யாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று தகவல் வெளியானது.

ரசிகர்கள் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆர்சிபி நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையி்ல், இந்த வழக்கை விசாரித்து வரும் சிஐடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிஐடி விசாரணையில் வெளிவந்த உண்மை:
கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி ஆர்சிபி அணி வெற்றி பெற்றதும் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக கர்நாடக மாநில கிரிக்கெட் நிர்வாகத்திடமும், பெங்களூர் போலீசாரிடமும் ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பில் அந்த அணியின் சிஇஓ ராஜேஷ் மேனன், விளம்பர பிரிவு தலைவர் நிகில் சோசலே பேசியுள்ளனர். அவர்கள் ஆர்சிபி அணி வெற்றி பெற்ற அடுத்த நாளான 4ம் தேதியே இந்த கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்சிபி தந்த அழுத்தம்:
அப்போது, போலீசார் பாதுகாப்பு காரணங்களால் 4ம் தேதி நடத்துவது சாத்தியமற்றது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், நிகில் சோசலே விராட் கோலி லண்டன் செல்வதால், விழாவை நடத்தியே தீர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் விராட் கோலி வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்றும் நிகில் சோசேலே அழுத்தம் கொடுத்ததாக தற்போது சிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுமட்டுமின்றி, ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை காண பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்று ஆர்சிபி அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் அறிவித்தது. இதனால், சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் சிறுமி உள்பட 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
கோலிதான் காரணமா?
இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கிய நிலையில், விராட் கோலியின் காரணமாகவே இந்த விழா அவசரம், அவசரமா க நடத்தப்பட்டது என்ற தகவல் அனைவராலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஆர்சிபி அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக விராட் கோலி அவசரம், அவசரமாக லண்டன் செல்ல இருந்ததே காரணம் என்று சிஐடி விசாரணையில் தெரிய வந்தது ரசிகர்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையை உண்டாக்கியது. மேலும், 18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை முதன்முறையாக வென்றும் ஆர்சிபி அணியால் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத சூழலை உண்டாக்கியுள்ளது.




















