IND Vs AUS T20 Match: சுந்தர், அக்சர், டூபேவின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலியா; 4-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
IND Vs AUS 4th T20: இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் சுழலில் ஆஸ்திரேலிய அணி சிக்கிய நிலையில், 4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4-வது டி20 போடடியில், 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு 167 ரன்கள் போதுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி, 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இந்த வெற்றியின் மூலம், டி20 தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்த இந்தியா
இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே இருவரும் ரன்களை சேர்க்க ஆரம்பித்த நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து சிவம் டூபே கில்லுடன் ஜோடி சேர்ந்தார். தூபே அதிரடியை தொடங்கிய நிலையில், 22 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார்.
இந்நிலையில், மறுமுனையில் 46 ரன்களுடன் அரை சதத்தை நோக்கி அடிவந்த சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கிய நிலையில், 20 ரன்களை எடுத்து ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பரான ஜிதேஷ் சர்மா களமிறங்கினார்.
இந்நிலையில், மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். இதனிடையே, 3 ரன்களில் ஜிதேஷ் சர்மா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அக்சர் படேல் களமிறங்கி அதிரடி காட்டினார். இந்நிலையில், மறுமுனையில், 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த அர்ஷ்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அதிரடி காட்டிய அக்சர் படேல் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வருண் சக்கரவர்த்தி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக, எல்லிஸ் மற்றும் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை விழ்த்தினர்.
இந்திய சுழலில் சிக்கி 119 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா
இதைத் தொடர்ந்து, 168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் மேட் ஷார்ட் சிறப்பாகவே தொடங்கினர். அவர்கள் இருவரும் சேர்ந்து, 4.5 ஓவர்களில் 37 ரன்களை குவித்திருந்த நிலையில், 25 ரன்கள் எடுத்திருந்த ஷார்ட் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து இங்கிலீஷ் களமிறங்கினார். ஆனால், அவர் 12 ரன்களில் அக்சரின் சுழலில் ஆட்டமிழந்தார். அவரைத் தெதாடர்ந்து டிம் டேவிட் களமிறங்க, மறுமுனையில் 30 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் ஆட்டமிழந்தார். அவரைத் தெடர்ந்து ஜோஷ் பிலிப் களமிறங்கினார்.
இதைத் தொடர்ந்து, இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் கையே ஓங்கியது. அடுத்தடுத்து வந்த ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களிலும், 2 பேரின் டக் அவுட் உட்பட 4 பேர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.
இதையடுத்து, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையுமே இழந்த ஆஸ்திரேலியா, 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில், அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், சிவம் தூபே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மற்ற 3 பவுலர்களுமே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
டி20 தொடரில் இந்தியா முன்னிலை
இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், இந்திய அணி அதிலும் வென்று தொடரை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.




















