![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IND vs SL, Match Highlight: அபார பேட்டிங்கால் வெற்றி பெற்ற இலங்கை...! மோசமான பவுலிங்கால் மீண்டும் தோல்வி..! தொடரை விட்டு வெளியேறியதா இந்தியா..?
Asia Cup 2022, IND vs SL: துபாயில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
![IND vs SL, Match Highlight: அபார பேட்டிங்கால் வெற்றி பெற்ற இலங்கை...! மோசமான பவுலிங்கால் மீண்டும் தோல்வி..! தொடரை விட்டு வெளியேறியதா இந்தியா..? Asia Cup 2022: Sri Lanka won match by 6 wickets against India in Match 9 at Dubai International Stadium IND vs SL, Match Highlight: அபார பேட்டிங்கால் வெற்றி பெற்ற இலங்கை...! மோசமான பவுலிங்கால் மீண்டும் தோல்வி..! தொடரை விட்டு வெளியேறியதா இந்தியா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/3a7a613e74e8980390ca9bf2f6fa3daf1662487307592102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா- குசல் மெண்டிஸ் ஜோடி அபார தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் இரு ஓவர்களில் தடுமாறினாலும் இந்திய வீரர்களின் அடுத்தடுத்த ஓவர்களில் நேர்த்தியாக ஆடினர். குறிப்பாக, இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினர்.
அர்ஷ்தீப், ஹர்திக், அஸ்வின், சாஹல் என யார் வீசினாலும் அவர்களது பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதனால், 5.1 ஓவர்களிலே இலங்கை 50 ரன்களை கடந்தது. இவர்கள் இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்ததால் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் அமைதியாகவே இருந்தனர். அபாரமாக ஆடிய நிசங்கா அரைசதத்தை கடந்தார். ஆனால், சஹல் வீசிய 12வது ஓவரில் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
அதிரடி காட்டிய நிசங்கா 52 ரன்களில் சஹல் சுழலில் வீழ்ந்தார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் வெளியேறினார். அதே ஓவரில் புதிய பேட்ஸ்மேன் அசலங்கா டக் அவுட்டாகி சஹல் பந்தில் வெளியேறினார். ஆனால், மறுமுனையில் தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். அஸ்வின் வீசிய 14வது ஓவரில் குணதிலகா 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி 6 ஓவர்களில் 64 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குசல் மெண்டிஸ் சஹல் பந்தில் 37 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி 16 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்றதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
புவனேஷ் வீசிய 19வது ஓவரில் இலங்கை கேப்டன் சனகா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தை ராஜபக்சே ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க 4 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 3வது பந்தில் இலங்கை வீரர்கள் 2 ரன் எடுக்க, 3 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. 4வது பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓவர் த்ரோவில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் கடைசி ஓவரை சிறப்பாக வீசினாலும் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சனகா – பனுகா ராஜபக்சே கூட்டணி அபார ஆட்டத்தில் இலங்கை ஏறக்குறைய இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்தது. ராஜபக்சே 17 பந்துகளில் 2 சிக்ஸருடன் 25 ரன்களுடனும், சனகா 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் சஹல் 3 விக்கெட்டை வீழ்த்தினார், ஆனால், புவனேஷ், அர்ஷ்தீப், ஹர்திக், சஹல், அஸ்வின் என அனைவரும் ரன்களை வாரி வழங்கினர்.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் அடுத்தடுத்து தோற்றதால் நடப்பு சாம்பியன் இந்தியா ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, இந்தியா ஆப்கானை வென்று, கடைசி சூப்பர் 4 போட்டியிலும் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோற்றால் மட்டுமே இந்தியாவிற்கு ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டி செல்ல வாய்ப்பு உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)