Thai Poosam 2025 : பால் காவடி, பன்னீர் காவடி.. மயிலத்தில் களைகட்டிய தைப்பூசம்...!
Thaipusam festival: முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், காலை 6 மணிக்கு 1008 சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகன் தங்க கவசம் அணிந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்தும், பால்குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்தும், மொட்டை அடித்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.
இதேபோல் செஞ்சி கிருஷ்ணாபுரம் - கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு 108 திரவிய அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம், கோவில் குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், தீமிதித்தல், அலகு குத்துதல், வேல் குத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி லாரி, கிரேன், டிராக்டர் போன்ற பல்வேறு வாகனங்களை இழுத்தபடி ஊர்வலமாக பறக்கும் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். முன்னதாக சாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் திருமுருகன் சுவாமிகள் மற்றும் கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் மரக்காணம் அருகே சிறுவாடி கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவை ஒட்டி செடல் உற்சவம் , காவடி ஆட்டம் என மிக விமர்சையாக நடைபெற்ற வருகிறது.
தைப்பூசம் விரதம்:
முருகனை வழிபட்டு தொடங்கிய காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முருகனை நினைத்து வழிபட்டால் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். தமிழ் கடவுள் முருகனுக்கு வைகாசி விசாகம், சஷ்டி விரதம் தைப்பூசம் என, முக்கிய விரத நாட்கள் உள்ளன. அதேபோல ஒரு முக்கியமான சக்தி மிகுந்த விரதம் தான் தைப்பூச விரதம். தைப்பூச 48 நாள் விரதம். இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி 2025 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அன்று தைப்பூச தினத்தன்று நிறைவு பெறுகிறது.வாழ்க்கையில் செல்வம் , வளர்ச்சி வேண்டுபவர்கள். கடன் துன்பம் நீங்க வேண்டும் என்பவர்கள். முருகனை நினைத்து இந்த விரதத்தை இருக்கலாம், என்று சொல்லப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

