Thaipoosam: கந்தனுக்கு அரோகரா.. நாளை தைப்பூசம்! முருகன் கோயில்களில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Thaipoosam 2026: முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தைப்பூசத் திருவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Thaipoosam 2026; தமிழ்க்கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். கிருத்திகை, சஷ்டி என்று முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்கள் பல இருந்தாலும் மிக மிக பிரசித்தி பெற்ற நாள் தைப்பூசம் ஆகும். உலகெங்கும் கோடிக்கணக்கான முருக பக்தர்கள் இந்த நாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
நாளை தைப்பூசம்:
தை மாதத்தில் பெளர்ணமி நாளில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதியே முருகன் ஆலயங்களில் கொடியேற்றம் நடந்து, தைப்பூச திருவிழா தொடங்கியது.
தைப்பூசத் திருவிழா தொடங்கியது முதலே பக்தர்கள் மாலை அணிந்தும், விரதம் இருக்கவும் தொடங்கிவிட்டனர். தைப்பூசம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது.
லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்:
குறிப்பாக, அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலையில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். தைப்பூசம் என்றாலே பழனிதான் அனைவருக்கும் முதன்மையாக நினைவுக்கு வரும்.
நேர்த்திக்கடன்:
தைப்பூசத்திற்கு பழனி முருகனுக்கு பக்தர்கள் காவடி எடுப்பதும், பாதயாத்திரை வருவதும் வழக்கம் ஆகும். நடப்பாண்டிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூசத் திருவிழாவிற்காக பழனியில் குவியத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பால்காவடி, பன்னீர்காவடி என பல வகை காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பழனி உள்பட அறுபடை வீடுகள் மட்டுமின்றி சிக்கல் சிங்காரவேலர் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், விராலிமலை முருகன் கோயில் உள்பட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் முக்கியமான கோயில்களில் காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அதிகளவு செல்லும் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டிலும் திருவிழா:
தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக, மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் பழனிக்கு நிகராக பக்தர்கள் குவிவது வழக்கம். மலேசியாவில் தமிழர்கள் லட்சக்கணக்கில் வாழ்வதால் அவர்கள் முருகன் கோயிலில் நாளை சென்று தரிசனம் செய்வார்கள்.
நாளை பெளர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதும் வழக்கம். தைப்பூசம் என்ற கூடுதல் அம்சத்துடன் வருவதால் நாளை வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று கருதப்படுகிறது.























