காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
மயிலாடுதுறை அருகே கூறைநாடு மாமரத்துமேடை திரௌபதி அம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு மாமரத்துமேடையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா மிக விமரிசையாகவும், பக்தியுணர்வுடனும் நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சிறப்பு ஹோமத்துடன் தொடங்கிய திருவிழா
புகழ்பெற்ற இத்திருக்கோவிலின் ஆடி உற்சவப் பெருவிழா கடந்த ஜூலை 19-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்றைய தினமே விழாவின் தொடக்கமாக பக்தர்களுக்குக் காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது. காப்பு கட்டியது முதல் பக்தர்கள் அனைவரும் கடுமையான விரத மேற்கொண்டு அம்மனை வழிபடத் தொடங்கினர்.
தினசரி புராண நிகழ்வுகள்
விழா தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா பாரத புராண கதைகளை விளக்கும் சிறப்பு நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த வகையில் ஸ்ரீ தர்மர் பிறப்பு, ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பு, திரௌபதியம்மன் அவதாரம், வில்வளைப்பு விழா, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல் மற்றும் கர்ணமோட்சம் ஆகிய மகாபாரதத்தின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் நாடகமாகவும், உபன்யாசங்களாகவும் தினந்தோறும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகளைக் காண சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் கோவிலுக்கு வருகை தந்தனர்.
கோலாகலமாக நடைபெற்ற தீமிதி விழா
திருவிழாவின் 9-ஆம் நாளான விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஆடித் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரைக்குச் சென்று புனித நீராடினர். அங்கு பம்பை மேளம், உடுக்கை மற்றும் தாரை தப்பட்டை முழங்க, சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, காப்பு கட்டி விரதமிருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையிலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கையில் வேப்பிலையுடன் ஊர்வலமாகத் திருக்கோவிலை வந்தடைந்தனர்.
அப்போது பக்தர்கள் "அம்மா தாயே..." என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு எதிரொலித்தன. கோவில் முன்பாகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், சக்தி கரகம் முன்னே செல்ல, காப்பு கட்டிய பக்தர்கள் அடுத்தடுத்து இறங்கி தீமிதித்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் மிக உற்சாகத்துடனும் பக்தியுடனும் தீ மிதித்து அம்மனின் அருளைப் பெற்றனர்.
சிறப்பு அலங்காரம் மற்றும் மாவிளக்கு வழிபாடு
தீமிதி நிகழ்வு நிறைவு பெற்றதை அடுத்து, மூலவர் மற்றும் உற்சவர் திரௌபதி அம்மனுக்குப் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வண்ண மலர்களாலும், சிறப்பு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று அம்மனைத் தரிசனம் செய்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாவிளக்கு தீபமிட்டும், தேங்காய் பழம் படைத்தும் அம்மனுக்குத் தங்களது வழிபாட்டைச் செலுத்தினர்.
அன்னதானம் மற்றும் வீதி உலா
விழாவை முன்னிட்டுப் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சுடச்சுட அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அருள்மிகு திரௌபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, பஞ்சமுக தீபாராதனையுடன் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகள்தோறும் பொதுமக்கள் வாசலில் கோலமிட்டு, அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























