திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்: ஐப்பசி பௌர்ணமி நாளில் சிவ தரிசனம்! மன அமைதி தரும் வழிபாடு!
மயிலாடுதுறை அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், ஐப்பசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டுச் சிவபெருமானுக்குச் சிறப்புமிக்க அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்னாபிஷேக அலங்காரத்தில் அருட்காட்சி அளித்த பிரம்மபுரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
அனைத்திற்கும் ஆதியாய் பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் ஐப்பசி மாதமும் ஒன்றாகும். குறிப்பாக, இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், இந்த ஐப்பசி பெளர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும்.
பழமை வாய்ந்த பாடல்பெற்ற தலம்
தரங்கம்பாடி தாலுக்காவில் அமைந்துள்ள திருமெய்ஞானம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற, மிகவும் தொன்மையான சிவன் ஆலயமாகும். இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மூலவராக அருள் பாலிக்கும் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், அனைத்து சிவன் ஆலயங்களிலும் சிவபெருமானுக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் என்பது மிகவும் விசேஷமான வழிபாடாகும். இந்த நாளில் சிவலிங்கத் திருமேனி முழுவதையும் சமைத்த சாதம் கொண்டு அலங்கரித்து வழிபடுவது ஐதீகம்.
அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்
ஐப்பசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதற்காகப் பிரம்மபுரீஸ்வரருக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள் ஆரம்பமாயின.
*அபிஷேகம்: சிவலிங்கப் பெருமானுக்குப் பால், பன்னீர், தேன், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
*அன்ன அலங்காரம்: அதைத் தொடர்ந்து, வடித்துத் தயார் செய்யப்பட்ட அன்னத்தைக் கொண்டு, பிரம்மபுரீஸ்வரரின் திருமேனி முழுவதும் ஐம்பொன் கவசம் போல் அலங்கரிக்கப்பட்டது.
* கூடுதல் அலங்காரங்கள்: மேலும், அலங்கரிக்கப்பட்ட அன்னத்தின் மீது பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், மற்றும் இனிப்புப் பலகாரங்களைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இறைவன் முழுமையான அன்னமயக் கோலத்தில் காட்சி அளித்தார்.
மகா தீபாராதனை மற்றும் அன்னதானம்
அன்னாபிஷேக அலங்காரத்தைத் தொடர்ந்து, பிரம்மபுரீஸ்வரருக்குச் சிறப்புமிக்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கூடியிருக்க, மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற தீபாராதனையின்போது, பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து 'ஓம் நமசிவாய' கோஷங்களை எழுப்பிச் சுவாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத்தின் மீது அலங்கரிக்கப்பட்ட அன்னம், மிகச் சிறப்பு வாய்ந்த பிரசாதமாகக் கருதப்படுவதால், தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களுக்கு அன்னாபிஷேக அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்குச் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த அன்னாபிஷேக விழாவில், திருமெய்ஞானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் எனத் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அன்ன அலங்காரத்தில் அருட்காட்சி அளித்த பிரம்மபுரீஸ்வரரைச் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ஐப்பசி அன்னாபிஷேகத்தின் சிறப்பு
சிவ பெருமானுக்கு பல அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலே இந்த அன்னாபிஷேகம் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால், சிவபெருமான் தனது தலையில் தாங்கியிருக்கும் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் இந்த ஐப்பசி பெளர்ணமி நாளிலே பிரகாசிப்பதாக புராணங்கள் கூறுகிறது.
இதன் காரணமாக இந்த நன்னாளில் சிவபெருமானையும், அவரது சிரத்தில் குடியிருக்கும் சந்திரனையும் வணங்குவதால் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். மேலும், இந்த நன்னாளில் தான் சிவபெருமான் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.






















