தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி
இந்த பண்டிகையை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை ஈஸ்டர் பண்டிகை ஆகும். கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கிய இந்த பண்டிகையை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று ஆலயங்களில் வழிபடுவது வழக்கம். எருசலேம் நகரில் கோவேரி கழுதையில் பவனியாக வந்த இயேசுகிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று ’தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா“ என்று முழங்கியதை நினைவு கூரும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. பவனியை தொடர்ந்து குருத்தோலைகளை தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச்சென்று அடுத்த ஆண்டு சாம்பல் புதன் நாள் வரை பாதுகாப்பாக வைத்திருந்து வழிபடுவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சை தூய இருதய பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெறுகிறது. வியாகுலமாதா ஆலய முகப்பில் இருந்து குருத்தோலைகள் புனிதம் செய்யப்பட்டு தூய இருதய பேராலயம் வரை பவனியாக வந்து அங்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பங்குத்தந்தை அமர்தீப்மைக்கேல், டோமினிக், குருக்கள் சாமிஅடிகள், சூசைமாணிக்கம், ஆரோக்கிய வினிட்டோ, ஜேசுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் திரு இருதய ஆலயத்தில் நடந்த ரத்ததான முகாமில் மறைமாவட்ட ஆயர் சகயாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் பெஞ்சமின் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி ஆலய வளாகத்தில் இருந்து காலை 8 மணிக்கு தொடங்கி சோழன்சிலை வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி-தஞ்சை திருமண்டல கல்விக்குழு செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.
இதேபோல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை 8 மணிக்கு பாஸ்டர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி சபை குரு சாமுவேல்கிளமெண்ட், சபை குரு செயலாளர் சார்லி மனோகரன், பொருளாளர் ஜவகர் மற்றும் சபை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குருத்தோலை பவனி ஆலய வாயிலில் இருந்து தொடங்கி வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தஞ்சை குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் இருந்து குருத்தோலை ஞாயிறு பவனி திருத்தல அதிபர் சுரேஷ்குமார் தலைமையில் புறப்பட்டு அடைக்கல மாதா அன்னை ஆலயத்தை அநை்தது. அங்கு குருத்தோலை ஞாயிறு வழிபாடு பங்குத்தந்தை ஜெயராஜ் தலைமையிலும், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை மரியசூசை தலைமையிலும், மானம்புச்சாவடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையிலும், வடக்குவாசலில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை டேனியல் தலைமையில் நடைபெற்றது.
இதே போல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

