![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சீர்காழியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாரடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சீர்காழி சாரடி மாரியம்மன் கோயில், மருதாந்தநல்லூர் ஸ்ரீ பூர்ணா புஷ்களா சமேத ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
![சீர்காழியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாரடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா Kumbhabhishekam ceremony of two different temples held in Mayiladuthurai district TNN சீர்காழியில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சாரடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/fed324175ca9d26daf6c8baba68613a51661333110451186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்த தொப்படி மாரியம்மன் எனும் சாரடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த சிதிலமடைந்த இக்கோயில் திருப்பணிகள் 100 ஆண்டுகளுக்குப் பிறகு செய்து முடிக்கப்பட்டு கடந்த 22 -ம் தேதி முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேல தாள மங்கள வாத்தியம் இசைக்க யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தன.
தொடர்ந்து காலை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதனையடுத்து சாரடி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களாக பேச்சி அம்மன், சப்த கன்னிகள் மற்றும் இரட்டை விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சட்டநாதர் கோயில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு கோயில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மேல மருதாந்தநல்லூர் ஸ்ரீ பூர்ணா புஷ்களா சமேத ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மேல மருதாந்தநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூர்ணா புஷ்களா சமேத ஐயனார் மற்றும் ஸ்ரீ வீரனார் சப்த கன்னி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 22 -ஆம் தேதி விநாயகர் ஹோமத்துடன் முதல் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் மகா பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை செய்யப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளத் தாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, வான வேடிக்கைகள் சத்தம் ஒலிக்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)