Trump in Iran Nuclear Talks: நேரடியாக மறைமுகமாக ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ட்ரம்ப்; புரியலைல்ல.? செய்திய படிங்க
ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்க உள்ளார். ஆனால் நேரடியாக அல்ல, மறைமுகமாக பங்கேற்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு என்ன அர்த்தம்.?

அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக, அமெரிக்கா ஈரான் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதற்காக பலமுறை ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், ஒருபுறம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று ஜெனீவாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், தான் மறைமுகமாக ஈடுபடப் போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது, ஜெனீவாவில் இன்று தொடங்கவுள்ள ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து, அந்நாட்டு பிரநிதிகளுக்கும்ம அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் "மறைமுகமாக" ஈடுபட உள்ளதாகவும், அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறினார். தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் இதுவரை அமெரிக்க பிரதிநிதிகளே ஈடுபட்டுவரும் நிலையில், முதல் முறையாக அதிபர் ட்ரம்ப் அதில் பங்கெடுக்க உள்ளார். ஆனால், நேரடியாக சென்று அல்ல, மறைமுகமாக என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை, தொலைபேசி வாயிலாகவோ, காணொலி வாயிலாகவோ அவர் பங்கேற்கலாம். இருந்தாலும், இந்த பேச்சுவார்த்தையில் அவர் நேரடியாக பங்கெடுப்பது இதுவே முதல் முறையாகும்.
ஒரு ஒப்பந்தத்திற்கான வாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஈரான் கடுமையான பேச்சுவார்த்தைகளை நாடியது. ஆனால், கடந்த கோடையில் அமெரிக்கா ஈரானிய அணுசக்தி தளங்களை குண்டுவீசித் தாக்கியபோது, அத்தகைய கடினமான நிலைப்பாட்டின் விளைவுகளை கற்றுக்கொண்டேன்“ என கூறினார். அதன் விளைவாக, இந்த முறை ஈரானியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உந்துதல் பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், "ஒரு ஒப்பந்தம் செய்யாததன் விளைவுகளை அவர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்றும், அவர்களின் அணுசக்தி திறனை அழிக்க B-2 ரக விமானங்களை அனுப்புவதற்கு பதிலாக ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
நிபந்தனை விதித்த ஈரான்
ஜெனீவாவில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் அரசு அமெரிக்காவிற்கு ஒரு நிபந்தனையை நேற்று விதித்தது. அதன்படி, பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க முன்வந்தால், அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தேவையான சமரசங்களை பரிசீலிக்க தயாராக உள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி கூறினார்.
ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பாக பேச அமெரிக்கா முன்வர வேண்டும் என்றும் அதன் பின்னர் அணுசக்தி ஒப்பந்தம் எட்டுவது குறித்து பேச ஈரான் தயாராக உள்ளது என்றும் மஜித் கூறினார்.
ட்ரம்ப்பின் முடிவு குறித்து எதிர்பார்ப்பு
ஓமனில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், அதில் ட்ரம்ப் எவ்வாறு பங்கேற்பார், ஈரான் விதித்த நிபந்தனை குறித்து அவர் என்ன முடிவெடுப்பார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.






















