Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
நன்றாக ஓடும் நிறுவனங்களை வாங்கிப் போடுவது எலான் மஸ்க்கின் வாடிக்கை. அந்த வகையில், ஒரு பெரிய நிறுவனத்தை வாங்க நினைத்த அவருக்கு ’நோ’ சொல்லிவிட்டது அந்த நிறுவனம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த நிறுவனம், மஸ்க்கின் மெகா ஆஃப்பரை நிராகரித்துள்ளது.
ஏராளமான நிறுவனங்களில் பங்கு வைத்திருக்கும் எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரராக கருதப்படும் எலான் மஸ்க், 1990-களில் ஒரு வலை மென்பொருள் நிறுவனம் மற்றும் ஆன்லைன் வங்கி ஆகிய 2 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கினார். அந்த ஆன்லைன் வங்கி நிறுவனமே பேபால் ஆகும். பின்னர், தொடர் சம்பாத்தியங்களை, ஸ்பேஸ் எக்ஸ் என்ற ராக்கெட் நிறுனம் தொடங்குவதில் முதலீடு செய்தார். அதோடு நிற்காமல், டெஸ்லா என்ற மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்திலும் முதலீடு செய்தார். இந்த இரண்டு நிறுவனங்களுமே பண விஷயத்தில் கடும் நெருக்கடிகளை சந்தித்தபோதும், தனது திறமையால் அவற்றின் தொழில்களை மேம்படுத்தியவர் எலான் மஸ்க்.
பின்னர், 2022 ஆம் ஆண்டில் சமூக ஊடக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை பெரும் தொகைக்கு வாங்கி, அதன் பெயர் மாற்றம் உள்பட பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றினார். ஏஐ தொழில்நுட்பத்தில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த, எக்ஸ் ஏஐ என்ற நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதேபோல், பல்வேறு நிறுவனங்களிலும் எலான் மஸ்க் பங்குகளை வைத்துள்ளார்.
ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க நினைத்த எலான் மஸ்க்
அந்த வரிசையில், லேட்டஸ்ட்டாக, செயற்கை நுண்ணறிவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் விருப்பம் தெரிவித்தார். சாட் ஜிபி ஏஐ சேவைகளை வழங்கி வருவதும் இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்தை வாங்குவதற்கான தொகையாக 97.4 பில்லியன் டாலர்களையும் நிர்ணயித்து, அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார் எலான் மஸ்க். இந்த தொகை, அந்நிறுவனத்தின் மதிப்பைவிட 30 பில்லியன் டாலர்கள் அதிகம் என கூறப்படுகிறது.
மஸ்க்கின் ஆஃப்பரை நிராகரித்த ஓபன் ஏஐ
மஸ்க்கின் அறிவிப்பைத் தொடர்ந்து, அலெர்ட்டான ஓபன் ஏஐ நிறுவனம், அவரது ஆஃப்பரை நிராகரித்தது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திலேயே அதற்கான பதிலை பதிவிட்ட அந்நிறுவனம், ஓபன் ஏஐ விற்பனைக்கு அல்ல என்றும், தனது போட்டியை சீர்குலைக்கும் மஸ்க்கின் முயற்சியை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஒருமனதாக நிராகரித்துவிட்டதாகவும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான ப்ரெட் டெய்லர் பதிவிட்டார். மேலும், எந்த ஒரு சாத்தியமான மறுசீரமைப்பும், ஏஜிஐ மூலம் லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, மஸ்க்கிற்கு பதிலளித்த இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், வேண்டாம்.. நன்றி என தெரிவித்ததோடு, வேண்டுமானால் எக்ஸ் நிறுவனத்தை 9.74 பில்லியன் டாலர்களுக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என்று கூறி, மஸ்க்கை நக்கலடித்திருந்தார்.
ஓபன் ஏஐ-ல் பங்குதாரராக இருந்த எலான் மஸ்க்
இதில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், 2015-ம் ஆண்டில், ஓபன் ஏஐ நிறுவனத்தை தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவராக இருந்தார் என்பதுதான். அதன் பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2018-ல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

