US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
அமெரிக்கா தொடர்ந்து மூன்று இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு இன்னும் திறந்தே உள்ளது என்பதை வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து மூன்று இரவுகளாக ஈரான் மீது எந்த புதிய தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாகத் தணியவில்லை. ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு திறந்தே உள்ளது என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கா மீண்டும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை கூறியதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, நேரடி ராணுவத் தாக்குதல்களுக்கு மாற்றாக வாஷிங்டன் தற்போது மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறது. இவற்றுள், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், அதிகரித்த பொருளாதார அழுத்தம் மற்றும் கடல்வழி முற்றுகை ஆகியவை அடங்கும். ஊடக அறிக்கைகளின்படி, இந்த கடல்வழி முற்றுகையால், ஈரானுக்கு ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான டாலர் பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, அதன் பொருளாதாரம் மீது கூடுதல் அழுத்தமும் உண்டாகிறது.
ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
இஸ்ரேலும் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. இஸ்ரேல் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அப்பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் தொடர்பாக ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. காஸ்பியன் கடலில் ஈரானிய ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களைத் தாக்கியதாக உக்ரைன் கூறியுள்ளது. இந்தக் கூற்று பிராந்திய பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஈரான் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
மத்திய கிழக்கில் நிலைமை பதற்றமாக உள்ளது
அமெரிக்கா, ஈரான் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்கு இடையேயான நிலைமை மிகவும் பதற்றமானதாகவே உள்ளது. தற்போது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை எதுவும் இல்லை என்றாலும், எந்தவொரு புதிய சம்பவமும் நிலைமையை விரைவாக மாற்றிவிடக்கூடும். இதன் விளைவாக, அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் சம்பந்தப்பட்ட அடுத்தகட்ட நிகழ்வுகள் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது.
முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒரு முக்கிய காரணம், அமெரிக்காவிடம் ஏவுகணை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுதான் என கூறப்பட்டது. அத்தகைய சூழலில் தான் அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தாக்குதல் நடத்த அமெரிக்கா முழுமையாக தயாராக உள்ளதாகவும், ஆனால், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே மிகவும் விவேகமான பாதையாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார். மேலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், காலம் செல்லச் செல்ல ஈரான் பேச்சுவார்த்தைகளில் அதிக தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் நம்புவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















