China Hits Back US: திருப்பி அடித்த சீனா.. வெந்த புண்ணில் பாய்ந்த வேல்.. தாங்குவாரா ட்ரம்ப்..?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், சீனா அதே அளவு வரியை திருப்பி விதித்துள்ளது.

அமெரிக்கா விதித்த 34% வரியைத் தொடர்ந்து, அதே அளவு வரியை திருப்பி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது. அதோடு சேர்த்து, சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்த கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் என்று சொல்லும் வகையில், ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு, ட்ரில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ள அமெரிக்காவிற்கு, இது மேலும் சிக்கலை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது.
பரஸ்பர வரிகளை விதித்து அதிரடி காட்டிய ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற ட்ரம்ப், அமெரிக்காவில் விதிக்கப்படும் வரிகளைவிட, மற்ற நாடுகள் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதிப்பதாகவும், இத்தனை காலமும் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதை பேச்சோடு நிறுத்தாமல், செயலிலும் காட்டிய ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி, அதாவது, எந்தெந்த நாடுகள் அமெரிக்காவிற்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை அமெரிக்காவும் விதிக்கும் என கூறினார்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பரஸ்பர வரிகளை விதித்த ட்ரம்ப், மற்ற நாடுகளுக்கு அதே அளவில் வரி விதிக்காமல், நட்பின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான தள்ளுபடியை கொடுத்து வரிகளை விதித்தார். அதன்படி, இந்தியாவிற்கு 26% வரியை விதித்த ட்ரம்ப், சீனாவிற்கு 34% வரியை போட்டுத் தாக்கினார்.
ட்ரம்ப் வரிகளை அறிவித்த அன்றிலிருந்து, உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தன. அமெரிக்காவில் பல்வேறு பங்குச் சந்தைகள் பின்னடைவை சந்தித்து, ட்ரில்லியன் கணக்கில் வீழ்ச்சிகளை அமெரிக்கா சந்தித்து வருகிறது. வரிகளை அறிவித்த அதிபர் ட்ரம்ப்பும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.
சீனா கொடுத்த பதிலடி - தாங்குவாரா ட்ரம்ப்.?
இப்படிப்பட்ட சூழலில், வர்த்தகப் போரிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ள சீனா, அமெரிக்காவிற்கு அதே 34% வரியை அனைத்து பொருட்களின் மீதும் விதித்து பதிலடி கொடுத்துள்ளது. அதோடு கூடுதலாக, பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
சீனாவின் வர்த்தக அமைச்சகம், 11 அமெரிக்க நிறுவனங்களை, நம்பமுடியாத நிறுவனங்க என பட்டியலிட்டு, அந்நிறுவனங்கள் சீனாவிலும், சீன நிறுவனங்களோடும் வர்த்தகம் செய்வதற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. மேலும், சீனாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய சில அறிய பூமிக் கூறுகளின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த, உரிமம் வழங்கும் முறையை கொண்டுவந்துள்ளது. இந்த பூமிக் கூறுகள், மின்சார கார்கள் முதல் ஸ்மார்ட் குண்டுகள் தயாரிப்பு வரை பயன்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலக அளவில் போட்டித்தன்மையுடன் இருக்கும் சில உற்பத்தி வகைகளான அமெரிக்க மருத்துவ இமேஜிங் உபகரணங்களின் ஏற்றுமதி தொடர்பான இரண்டு விசாரணையையும் தொடங்குவதாக சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 5 பெரிய விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சிக்கன் இறக்குமதி செய்வதை நிறுத்து உள்ளதாக சீன சுங்கத்துறை பொது நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல், இவை 5 இல்லாமல், 6-வதாக ஒரு நிறுவனத்திடமிருந்து அரிசி இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சீனா அமெரிக்காவிடமிருந்து பொருட்கள் வாங்குவதைவிட, அதிக அளவில் பொருட்களை விற்பனை தான் செய்கிறது. அதனால், சீனாவை விட, அமெரிக்காவிற்கு குறைவான பாதிப்புகளே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், தற்போது விமர்சனங்களை சந்தித்து வரும் ட்ரம்ப்பிற்கு இது சற்று பின்னடைவை ஏற்படுத்தும் விஷயமாகத்தான் இருக்கும்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

