America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
சிரியாவில் மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஐஎஸ்ஐஎஸ்(ISIS) நிலைகள் மீது குறி வைத்து, ஆபரேஷன் ஹாக்கே(Operation Hawkeye) என்ற பெயரில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. பால்மைரா பகுதியில் நடந்த கொடூரமான தாக்குதலில், அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, பென்டகன் கடுமையான பதிலடி கொடுக்க முடிவு செய்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வலையமைப்பை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்துடன், அமெரிக்க ராணுவம் 'ஆபரேஷன் ஹாக்கே ஸ்ட்ரைக்'-ஐத் தொடங்கியுள்ளது.
பென்டகன் தலைவர் பீட் ஹேக்செத் எக்ஸ் தளத்தில் அளித்த தகவலின்படி, டிசம்பர் 13-ம் தேதி அன்று சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு குடிமகன் கொல்லப்பட்டனர். மேலும், மூன்று வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது குடிமக்கள் மற்றும் வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளாது என்றும், உலகில் எங்கு அமெரிக்கர்களை குறிவைப்பவர்களையும் துரத்தி அழிப்போம் என்றும் அவர் தெளிவாகக் கூறினார்.
சிரியாவில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பு
அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களின்படி, இந்த நடவடிக்கையின் கீழ் மத்திய சிரியாவில் ஐ.ஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சுமார் 70 தளங்கள் தாக்கப்பட்டன. இதில் பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் பயிற்சி முகாம்கள் அடங்கும். நிலைமையை பொறுத்து, வரும் நாட்களில் மேலும் ராணுவ நடவடிக்கைகள் இருக்கலாம் என்று பென்டகன் சுட்டிக்காட்டியுள்ளது.
எந்த ஆயுதங்களால் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.?
இந்த நடவடிக்கையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் ராணுவ பலத்தை வெளிப்படுத்தின. தாக்குதல்களில் எஃப்-15 ஈகிள் ஃபைட்டர் ஜெட், ஏ-10 தண்டர்போல்ட் அட்டாக் ஏர்கிராஃப்ட், ஏஎச்-64 அப்பாச்சி ஹெலிகாப்டர் மற்றும் ஹிமார்ஸ் ராக்கெட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஜோர்டானின் எஃப்-16 போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றன.
பயங்கரவாதிகளுக்கு ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வலுவான கோட்டைகளை இந்த தாக்குதல்கள் குறிவைப்பதாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அமெரிக்காவை தாக்க அல்லது அச்சுறுத்த முயற்சிக்கும் எந்த பயங்கரவாத அமைப்பிற்கும், முன்னெப்போதையும் விட கடுமையான பதில் அளிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷாராவுக்கு தனது ஆதரவையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அசத்-க்கு பிறகு அமெரிக்கா-சிரியா உறவில் மாற்றம்
பஷார் அல்-அசத் அதிகாரத்திலிருந்து வெளியேறிய பிறகு, அமெரிக்கா மற்றும் சிரியா இடையேயான உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இடைக்கால அதிபர் அஹ்மத் அல்-ஷாரா வாஷிங்டனுக்கு பயணம் செய்து, அமெரிக்க தலைவர்களை சந்தித்தார். 1946-க்குப் பிறகு, ஒரு சிரிய அதிபர் வெள்ளை மாளிகைக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.





















