Melpathi Kovil issue: ‘கோயிலுக்குள் நாங்க வர மாட்டோம்’ ; ஒருவர் கூட சாமி தரிசனம் செய்ய வரவில்லை - தொடரும் எதிர்ப்பு
மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் இரண்டாவது நாளாக திறக்கப்பட்டதில் ஒருவர் கூட சாமி தரிசனம் செய்ய வரவில்லை.

விழுப்புரம்: மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் இரண்டாவது நாளாக திறக்கப்பட்டதில் ஒருவர் கூட சாமி தரிசனம் செய்ய வரவில்லை என்பதால் 6 மணிக்கு திறக்கபட்டு மீண்டும் 7 மணிக்கு மூடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல் பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தரிசனம் செய்தபோது மாற்று சமூகத்தினர் சாமி தரிசனம் செய்யவிடாமல் அடித்து வெளியேற்றினர்.
இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இருப்பினும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால் பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பினர் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் அதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி இருதரப்பினரையும் கோவிலுக்குள் அழைத்து செல்ல திரெளபதி அம்மன் கோவிலில் 22 சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டு இருதரப்பினரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன் பேரில் இரண்டு வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோயிலில் நேற்றைய தினம் பட்டிலின சமூகத்தை சார்ந்த 50 க்கும் மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்புடன் சாமி தரிசனம். மாற்று சமூக தரப்பிலிருந்து ஒரு பெண் பத்து சிறுவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்த நிலையில் இன்றைய தினம் கோவில் விழா குழுவினர் இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று கோவில் 6 மணி முதல் 7 மணி வரை திறக்கப்பட்டபோது பட்டியலின சமூகத்தை சார்ந்தவர்களும், மாற்று சமூகத்தை சார்ந்தவர்களும் இன்று ஒருவர் கூட சாமி தரிசனம் செய்ய வரவில்லை என்பதால் கோவில் ஒரு மணி நேரம் திறக்கப்பட்டு மூடப்பட்டது. இன்றைய தினம் மட்டும் இருவேளை கோவில் திறக்கப்படும் என்பதால் மாலை மீண்டும் 6 மணி முதல் 7 மணி வரை கோவில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

