![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 4 பேர் கைது
திருவண்ணாமலை அருகே 3 சரக்கு வாகனங்களில் நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 4 நபர்களை காவல்துறையினர் கைது
![திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 4 பேர் கைது Thiruvannamalai Four persons have been arrested for trying to smuggle 6 tonnes of ration rice to Namakkal in three trucks திருவண்ணாமலையில் இருந்து நாமக்கல்லுக்கு 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 4 பேர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/412abba1c135c58d8a8a2cca0b1b9067_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி இவர், அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர் விடுதியில் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, தோப்பூர் மற்றும் கல்யாணமந்தை ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வெளி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்த போது உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அருணகிரி மற்றும் சாந்தி ஆகியோர் தலைமறைவாகினர். மேலும் சாந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அந்த குழுவினர் ஜமுனாமரத்தூரில் முகாமிட்டு சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தி பணியாற்றிய கல்யாணமந்தை பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் அந்த சமுதாய கூடத்தில் உள்ள அறையை திறந்து சோதனை நடத்தினர். அதில் 51 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 14 கோதுமை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அனைத்தையும் பறிமுதல் செய்த அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இதற்கும், தலைமறைவான விற்பனையாளர் சாந்தி என்பவருக்கு தொடர்பு உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜமுனாமரத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த கொளக்குடி கிராமத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, நாமக்கல் மாவட்டத்துக்கு சரக்கு வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக வெறையூர் காவல்துறைக்கு நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கொளக்குடி கிராமத்தில் வெறையூர் காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது, சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 சரக்கு வாகனங்களை காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த வாகனங்களில் 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 3 வாகனங்களில் இருந்த 4 நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திருவண்ணாமலை திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் பிச்சாண்டி (46) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கடத்தி வந்ததும் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவா (24), சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி (38), ஆனந்தன் (32) ஆகியோர் சரக்கு வாகன ஓட்டுநர் என்பது தெரியவந்தது. பின்னர் 6 டன் ரேஷன் அரிசி, 3 சரக்கு வாகனங்களையும் மற்றும் 4 நபர்களையும் திருவண்ணாமலை மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் வெறையூர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)