திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்
காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்கள், சிறுவர்களை ஏஜெண்டுகளாக்குகின்றனர் என்று திருச்சி கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர்: திருச்சி காஜாபேட்டை பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள், சிறுவர்கள் தவறான பாதையில் செல்லும் நிலை உள்ளதால் உடன் நடவடிக்கை என்று வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திரண்டு வந்து புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனு அளித்த பின் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தரப்பில் கூறுகையில், நாங்கள் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக காஜாபேட்டை பசுமடம் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறிய ஒரு பெண்மணி, போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வருகிறார். வெளியில் இருந்து வரும் நபர்களால் எங்கள் பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் என ஒட்டுமொத்த இளம்தலைமுறையும் சீரழிந்து வருகிறது.
நன்றாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த வாலிபர்களை, இதை விற்றால் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன் என ஆசை காட்டி இந்த போதை கும்பல் தங்களது ஏஜென்ட்டுகளாக மாற்றி அவர்களின் வாழ்க்கையையே பாழாக்கியுள்ளது. முக்கியமாக போதை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களது சொந்த தாயாரையே அடித்து துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து போதைப்பொருட்கள் விற்பவர்களை தட்டிக் கேட்டால், வீடுகளின் மீது நள்ளிரவில் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, வீட்டின் ஓடுகளை உடைத்ததால் மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் தவித்துள்ளனர். மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியும், உடைத்தும் இந்த கும்பல் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் அளிக்கச் சென்ற பொதுமக்களிடம், நீங்கள் ஏன் அங்கு இருக்கிறீர்கள்? இடத்தை காலி செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே?" எனப் போலீசார் அலட்சியமாகப் பேசுகின்றனர். புகார் கொடுத்துவிட்டு வந்த சில மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட நபர்கள் தெருவுக்குள் வந்து, யார் போலீசுக்குச் சென்றார்களோ, அவர்களின் வீடுகள் மீது கல் வீசுவோம் என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு, காஜாபேட்டை பசுமடம் பகுதியில் போதைப்பொருள் சப்ளை செய்யும் பிரதான குற்றவாளியான அந்தப் பெண்ணை அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த புகார் மனுவால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவர்களை குறிவைத்தும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தவறான வருமானம் மற்றும் போதைக்கு இப்பகுதி சிறுவர்கள், மாணவர்கள் அடிமையாவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















