மக்கள் பயனுக்காக செய்கிறீர்களா? பயமுறுத்த செய்யறீங்களா?: மிரண்டு போயிருக்கும் திருச்சி வாசிகள்
இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் ஜல்லிகள் சிதறி கிடப்பது தெரியாமல் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

திருச்சி: மக்களோட பயனுக்காக செய்யறீங்களா. இல்ல பயந்து போறப்புல செய்யறீங்களா என்று சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீர்புரம்- மன்னார்புரம் வரை நடைபெற்று வரும் சாலைப் பணிகளால் மிரண்டு போய் உள்ளனர் வாகன ஓட்டுனர்கள்.
திருச்சி பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படும் பகுதியாகும். இங்கு வாகனம் ஓட்டுவது என்பதே மிகப்பெரிய சாதனை என்று கூறலாம். காரணம் அந்த அளவிற்கு நெரிசல் மிகுந்து காணப்படும். இப்படிப்பட்ட வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் வாகன ஓட்டுனர்களை அச்சப்படவும், அவதிப்படவும் செய்துள்ளது. விஷயம் என்னன்னா...
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில், சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருச்சி மாவட்ட எல்லையில் இருந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் வரை 38.55 கி.மீ. தொலைவுக்கு சாலையை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதில் தற்போது பழைய பால்பண்ணை தொடங்கி- டிவிஎஸ் டோல்கேட் வரையிலான சாலையை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சாலைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனம், பழைய தார் சாலையை பெயர்த்தெடுத்து, அதன் கழிவுகளை முறையாக, முழுமையாக அப்புறப்படுத்தாததால், சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் ஜல்லிகள் சிதறி கிடப்பது தெரியாமல் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சரியான முறையில் பணிகளை மேற்கொள்ளாததால் வாகன ஓட்டுனர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் திட்ட பணிகளை எவ்வாறு மக்களை பயன்படுத்தும் வகையில் செய்வதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர் பொதுமக்கள் .
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், சென்னை- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை புதுப்பிக்கும் பணிக்காக சாலைகள் ஆங்காங்கே பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெயர்த்தெடுக்கப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்றுவதில்லை. மேலும், பெயர்த்தெடுக்கப்பட்ட பகுதியில் சாலை முழுவதும் சிறுசிறு குழிகளாக காணப்படுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்லும்போது தடுமாறி கீழே விழும் நிலைம் ஏற்படுகிறது.
தவிர, சாலை முழுவதும் ஜல்லிக் கற்கள் பரவிக்கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. செந்தண்ணீர்புரத்தில் இருந்து மேம்பாலம் இறங்கி பொன்மலைக்கு திரும்பும் வழியில் சாலையை ஒட்டி மண் சாலையில் ஜல்லிக் கற்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால், நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டுனர்கள், அந்த இடத்தையும் சாலை என எண்ணி, அதில் பயணித்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலைப் பணிகள் நடைபெறுவதாக எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் எதுவும் இல்லை. எனவே, சாலைப் பணிகளை முறையாக செய்து, விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்
இதுகுறித்து ‘நகாய்’ அதிகாரி ஒருவர் கூறுகையில், “சாலையில் பெயர்த்தெடுக்கப்படும் ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கழிவுகள், உடனடியாக ‘கம்ப்ரஸர்’ இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. ஆயினும் சாலையில் தொடர்ந்து வாகனங்கள் செல்வதால் சிறு, சிறு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடக்கின்றன. அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்க ஒப்பந்த நிறுவனத்தை அறிவுறுத்தி உள்ளோம்.
சாலைப் பணிகள் நடைபெறுதாக அறிவிப்புகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிகள் இன்னும் 15 நாட்களில் நிறைவடையும். அதன் பிறகு சாலைகளில் மார்க்கிங் செய்வது, ஒளிரும் ‘ஸ்டெட்’ அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சாலைப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடையும்” என்றார்.





















