திருச்சியில் சோகம்: சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்த கோட்டாட்சியர்
பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக உடனே ஜீப் டிரைவர் ஜீப்பை வேகமாக இடது பக்கம் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஜே.சி.பி. இந்திரம் மீது மோதியது.

திருச்சி: திருச்சி அருகே ஜே.சி.பி. இயந்திரம் மீது ஜீப் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் சப்-கலெக்டர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. படுகாயம் அடைந்த ஜீப் டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி உதவி கலெக்டராக (கோட்டாட்சியர்) இருந்தவர் ஆரமுத தேவசேனா (50). இவர் இன்று காலை அலுவலக ஜீப்பில் முசிறியில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டார். நலத்திட்ட உதவிகள் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஜீப்பை அலுவலக டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆரமுத தேவசேனா ஜீப்பில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். இந்த ஜீப் இன்று காலை ஜீயபுரம் அருகே கரியகுறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தது.
எதிர் திசையில் திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ்சும் வந்து கொண்டிருந்தது. கரிய குறிச்சி பகுதியில் நேருக்கு நேர் ஜீப் மீது மோதுவது போல் அரசு பஸ் வந்துள்ளது. இதனால் பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக உடனே ஜீப் டிரைவர் ஜீப்பை வேகமாக இடது பக்கம் திருப்பி உள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரம் சாலை பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் அக்கம்பக்கத்தினர் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து ஜீப்பில் சிக்கிக் கொண்டு படுகாயமடைந்த டிரைவரை மீட்டனர்.
உடன் ஜீயபுரம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் வாயிலாக படுகாயமடைந்த நிலையில் இருந்த ஜீப் டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த உதவி கலெக்டர் ஆராமுத தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
பலியான சப்-கலெக்டர் (கோட்டாட்சியர்) ஆரமுத தேவசேனாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகும். பெண் உதவி கலெக்டர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் வருவாய்த் துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






















