திருச்சி அருகே நகைகள் கொள்ளை சம்பவத்தில் 12 பேர் கைது... 97 சதவீத நகைகள் மீட்பு
மிளகாய்பொடியை நகைக்கடை ஊழியர்கள் மீது தூவி அவர்கள் கொண்டு வந்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது.

தஞ்சாவூர்: திருச்சி அருகே மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 97 சதவீத நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
திருச்சி, சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை ஒரு கும்பல் வழிமறித்தது. தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த மிளகாய்பொடியை நகைக்கடை ஊழியர்கள் மீது தூவி அவர்கள் கொண்டு வந்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது. திருச்சி மாவட்டத்தை பெரிதும் பரபரப்பாக்கியது இந்த கொள்ளை சம்பவம்.
இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கார் டிரைவர் பிரதீப் (24) இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கார் டிரைவர் பிரதீப் மற்றும் அவருடைய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன்ராம் (21), கைலாஷ் (20), வினோத் என்ற பன்னாராம்(31), முகமது சோகைல் (21), மனோகர்ராம் (27), மணீஸ்சிரோகி (19), மங்கிலால் கனாராம் (22) மற்றும் விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் (18) ஆகியோர் கூட்டாக சேர்ந்து 10 கிலோ நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இந்த கொள்ளை சம்பவம் நடந்த உடனேயே தங்க நகைகளுடன் மங்கிலால் கனாராம், விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் ஆகியோர் மும்பைக்கு தப்பி சென்று விட்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்தது. தொடர்ந்து இவர்களில் 7 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நகைகளை கைப்பற்றினர்.
மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை நடந்த சில நாட்களிலேயே துரித விசாரணையில் குற்றவாளிகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் பிரதீப் தான். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 9.9 கிலோ நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளோம். கொள்ளையடிக்கப்பட்டதில் 97 சதவீதம் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இல்லை.
ஐந்து பேர் மீது வட மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மிகவும் துரிதமாக இந்த வழக்கில் பணியாற்றி குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றி போலீசாருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






















