நெல்லை விக்கிரமசிங்கபுரம் அருகே இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடிகள் - சிசிடிவி காட்சியால் பரபரப்பு
இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இங்குள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும், இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அதனை வனத்திற்குள் விரட்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
மேலும் விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து விடுவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள்ளே புகுந்து பொதுமக்களையும் அச்சுறுத்தி வரும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான டாணா, கோட்டைவிளை பட்டி, அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரடி சுற்றிவரும் நிலையில் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக நேற்று இரவு 2 குட்டிகளுடன் கரடி ஒன்று விக்கிரமசிங்கபுரம் அருகில் உள்ள கோட்டை விளைப்பட்டி மற்றும் சங்கரபாண்டியபுரம் இணைப்பு சாலையில் உள்ள தீரன் சுடலைமாடசுவாமி கோவில் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது ஒற்றை கரடியாக அப்பகுதியில் வலம் வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் சுற்றி திரியும் கரடியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் பெண் ஒருவர் அதிகாலையில் கரடியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சிவந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இரவு நேரங்களில் கரடி சுற்றி திரிந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets