![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Arikomban : புல், தண்ணீர் மட்டுமே உணவு.. உடல் எடை குறைந்த அரிக்கொம்பன்.. வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தது என்ன?
வழக்கமான அரிசியை தவிர்த்து இப்பொழுது காட்டில் கிடைக்கும் அதிகமான புல் மற்றும் தண்ணீர் குடிப்பதால் மெலிந்தது போன்ற தோற்றம் இருக்கிறது.
![Arikomban : புல், தண்ணீர் மட்டுமே உணவு.. உடல் எடை குறைந்த அரிக்கொம்பன்.. வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தது என்ன? Arikomban looks slim by drinking grass & water without rice - forest officer Arikomban : புல், தண்ணீர் மட்டுமே உணவு.. உடல் எடை குறைந்த அரிக்கொம்பன்.. வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/711fe5df00c24551e944c82652e3f0bd1687691451280109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை கடந்த ஜூன் 5ஆம் தேதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. அன்று முதல் வனத்துறை அதிகாரிகள் மூலம் அதன் கழுத்தில் கட்டப்பட்ட ரேடியோ காலர் உதவியுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இடையிடையே அரிக்கொம்பன் யானைக்கு உடல் எடை குறைவு காரணமாகவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் பல்வேறு தரப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. ஊடகங்களில் அது தொடர்பான செய்திகளும் வெளியானது. மேலும் முன்னதாக வனத்துறை அதிகாரி சுப்ரியா சாகு என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தவறான வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதில் அரிக்கொம்பன் யானை உறங்குகிறது என பதிவு செய்து அது தவறான வீடியோ என தெரிந்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கினார்.
அதன்பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த அரிக்கொம்பன் யானை தற்போது நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கோதையாறு அணை பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும், அதனை 15க்கும் மேற்பட்ட வனக்குழு அதிகாரிகள், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர். பின் ரேடியோ காலர் பொருத்தப்பட்ட நிலையில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி கீழே இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரிக்கொம்பனின் நிலை என்ன? அது எப்படி இருக்கிறது என செய்தி வெளியிடப்பட்டது. இச்சூழலில் தான் அரிக்கொம்பன் மெலிந்து காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியானது
இது தொடர்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குனர் செண்பகப்பிரியா, நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது நலமாக இருக்கிறது. வழக்கமான அரிசியை தவிர்த்து இப்பொழுது காட்டில் கிடைக்கும் அதிகமான புல் மற்றும் தண்ணீர் குடிப்பதால் மெலிந்தது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால் இதுதான் அதன் உண்மையான உடல் அமைப்பு. முதுகெலும்பு தெரியும்படிதான் அதன் தோற்றம் இருக்கும். வனத்துறையில் இருந்து 40 பேர் மற்றும் வனத்துறை சேர்ந்த கால்நடை மருத்துவக்குழு மூன்று பேர் கண்காணிப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 6 குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் யானையை கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் இறங்காதவாறு இந்த கண்காணிப்பு தொடர்கிறது. தற்போது 19 நாட்கள் ஆன நிலையில் 21 நாட்கள் ஆன பின்னர் அரிக்கொம்பனை கண்காணிக்கும் 40 பேர் கொண்ட வனத்துறை குழு கலைக்கப்படும். இதனை அடுத்து அதன் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் கொண்டு தொடர்ந்து நான்கு பேர் மட்டும் அரிக்கொம்பன் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். அரிக்கொம்பன் தும்பிகையில் இருந்த காயம் மற்றும் உடலில் இருந்த காயங்கள் முழுவதுமாக ஆறிவிட்டன. காயத்திற்காகவோ, உடல் நலத்திற்காகவோ எந்த ஒரு மருந்தும் அரிசி கொம்பனுக்கு இப்போது கொடுக்கப்படவில்லை. தற்போது தான் காட்டு யானையாக நலமாக உள்ளது. விரைவில் அங்குள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து விட்டால் அரிக்கொம்பன் குறித்த எந்த ஒரு அச்சமும் இனி இருக்காது என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் துணை இயக்குனர் செண்பகப்பிரியா அளித்த தகவலில் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)