நெல்லையில் நடந்த போராட்டத்திற்கு 10 பேரை திரட்டவே படாது பாடுபட்ட அதிமுக..! அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்காக நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க மிக குறைவான எண்ணிக்கையிலையே அதிமுகவினர் கலந்து கொண்டது கடைநிலை தொண்டர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 50க்கும் மேற்பட்ட பலியான விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர் ஆனால் போராட்டத்தில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் வரவில்லை.
தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில நிர்வாகி அன்பு அங்கப்பன் தலைமையில் சுமார் 10 பேர் மட்டும் கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை அருகில் மறியல் போராட்டத்திற்கு தயாராகினர். ஆனாலும் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சி என்பதால் குறைந்தபட்சம் 50 பேராவது இருந்தால் தான் நன்றாக இருக்கும் என எண்ணிய அன்பு அங்கப்பன் மற்ற நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து உடனே வரும்படி கூறினார். ஆனாலும் கடைசி வரை யாரும் வரவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் 10 பேரை வைத்து நெல்லை தென்காசி சாலையில் கொக்கிரக்குளம் எம்ஜிஆர் சிலை அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். குறிப்பாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும், தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும், திமுக அரசே ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பல்வேறு தொகுதிகளில் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக இதே நெல்லை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். எனவே தமிழகத்தில் அதிமுக வலுவிழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதி வரும் நிலையில் மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனைக்காக நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க மிக குறைவான எண்ணிக்கையிலையே அதிமுகவினர் கலந்து கொண்டது கடைநிலை தொண்டர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது..