’என் மகனை கடத்தி கொன்றுவிட்டார்கள்’ - தூத்துக்குடியில் ஆட்சியரிடம் பெண் புகார்
எனது மகனை திரேஸ்புரம் சங்குமால் பின்புறம் உள்ள சுடுகாட்டில் வைத்து அடித்து துன்புறுத்தி ஓட ஓட விரட்டியதாகவும் அதனை நேரில் கண்ட நபர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

தூத்துக்குடியில் மகனை கடத்தியதாக 3 பேரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்கு குளி காலனியைச் சேர்ந்த களஞ்சியம் மனைவி சுஜோஷ்வரி (வயது 55) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், என் கணவர் ஒரு இருதய நோயாளி. அவரால் எந்த வேலையும் செய்ய இயலாது. எனக்கு ஐந்து ஆண் இரு பெண் குழந்தைகள். இரண்டு பென் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு திருமணமாகிவிட்டது. மீதமுள்ள மூன்று ஆண் குழந்தைகளும் கடல் தொழில் செய்துவந்தார்கள்.

நான் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். எனது கடைசி மகனான மாரிச் செல்வம் என்ற அசால்ட் (24) திருமணமாகாத நிலையில் இருந்துவந்தான். அவருக்கும் சங்குகுளி காலனி மேட்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பிரபு, கருப்பன் மகன் காளிதாஸ் மற்றும் அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த சேசு மகன் ஆகாஸ் என்பவருக்கும் இடையே கடந்த 21.06.2024 அன்று வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரபு மற்றும் காளிதாஸ் செல்போன்கள் உப்பு பாத்தி தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாகவும் எனவே உன் மகன் மாரிச் செல்வம் என்ற அசால்ட் என்பவனை ஆள் வைத்து தூக்கிவிடுவோம் என்று என்னிடம் நேரில் வந்து சொல்லிவிட்டு சென்றார்கள். இதன் பின்னர் எனது மகனை காணவில்லை.

மேலும் எனது மகனை திரேஸ்புரம் சங்குமால் பின்புறம் உள்ள சுடுகாட்டில் வைத்து அடித்து துன்புறுத்தி ஓட ஓட விரட்டியதாகவும் அதனை நேரில் கண்ட நபர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இவ்வாறான நிலையில் மேற்கண்ட பிரபு, காளிதாஸ், ஆகாஸ் ஆகிய மூவருமே என் மகன் மாரிச் செல்வம் என்ற அசால்ட் என்பவனை கடத்தி கொன்றுவிட்டார்களோ என நான் அறிய வருகிறேன். இன்றுவரை என் மகன் மாரிச் செல்வம் என்ற அசால்ட் என்பவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். காவல்துறை அதிகாரிகளும் நீங்களும் உங்கள் மகனை தேடுங்கள் நாங்களும் தேடுகிறோம் என்று சொல்லியே இன்றோடு என் மகன் மாரிச்செல்வம் என்ற அசால்ட் என்பவன் எங்களை விட்டுச் சென்று 10 தினங்கள் ஆகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.





















