தூத்துக்குடியில் 10 பில்லியன் டாலர் முதலீடு! லத்தீன் அமெரிக்கா ரகசிய திட்டம்?
லத்தீன் அமெரிக்கா பெரிய அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார கார் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. இதன் மூலம் அந்த மாவட்ட மக்களுக்கு பெருமளவிலான வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் லத்தீன் அமெரிக்க நாடுகள் பெரிய அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியங்களை சேர்ந்த நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. சென்னையில் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளின் வர்த்தக கூட்டமைப்பு மாநாடு நடத்தப்பட்டது. அப்போது இந்திய லத்தின் அமெரிக்க வர்த்தக கூட்டமைப்புக்கான தலைவராக இருக்கும் ராஜ்குமார் ஷர்மா செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு இறுதிக்குள் லத்தீன் அமெரிக்க நாடுகள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளனர் என்ற தகவலை வெளியிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டு இருக்கிறார் . எந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய இருக்கின்றன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. தேசிய பாதுகாப்பு கருதி இந்த விவரங்களை என்னால் வெளியிட முடியாது என பேட்டியில் குறிப்பிட்டு இருக்கும் ராஜ்குமார் ஷர்மா பாதுகாப்பு துறை சார்ந்த முதலீடாக இது இருக்கும் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார். இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் என்பது 2000ஆம் ஆண்டு 2 பில்லியன் டாலராக தான் இருந்தது அது தற்போது 18 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை லித்தியம் மற்றும் அரிய வகை பொருட்களை இறக்குமதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துகிறது.
தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய துறைமுகம் சார்ந்த நகரங்களில் எல்லாம் இது சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, லாஜிஸ்டிக்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய பிரிவுகளின் தென்னிந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுவதாக ராஜ்குமார் ஷர்மா தெரிவிக்கிறார். ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்கள் லத்தின் அமெரிக்க நாடுகளிடமிருந்து 40 மில்லியன் டாலர்கள் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன எனக் கூறியிருக்கும் அவர், இதில் பெருமளவிலான முதலீடு தமிழ்நாட்டை நோக்கி தான் வந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக இந்தியா லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் கியூபா, சிலி, வெனிசுலா, அர்ஜென்டினா, எல் சால்வடார் நாடுகளை சேர்ந்த தொழில்துறை தலைவர்களும் ,தூதரக அதிகாரிகளும், தொழில் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.






















