குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு 66.47 அடியாகும். தற்போது இதில் 38.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வரும் முக்கிய நீராதாரங்களான பாலாறு–பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் கோடை வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ள நிலையில், தற்போது உள்ள நீரையே சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. பழனி வட்டாரத்தின் மிகப்பெரிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கும் பாலாறு–பொருந்தலாறு அணையின் மொத்த கொள்ளளவு 65 அடியாகும். ஆனால் தற்போது அணையில் 35.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு கடந்த சில நாட்களாக புதிய நீர்வரத்து இல்லாத நிலையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 16 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதேபோல் பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு 66.47 அடியாகும். தற்போது இதில் 38.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததுடன், வெளியேற்றமும் மேற்கொள்ளப்படாமல் அமைதியான நிலை காணப்படுகிறது. இருப்பினும் மழையின்மை நீடித்தால் இந்த அணையிலும் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பழனி வட்டார விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் குதிரையாறு அணையின் மொத்த கொள்ளளவு 80 அடியாக இருந்தாலும், தற்போது 47 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இங்கும் புதிய நீர்வரத்து இல்லை. வெளியேற்றமும் மேற்கொள்ளப்படாததால், எதிர்கால நீர் தேவையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். அந்த மழை போதுமான அளவில் பெய்தால் மட்டுமே இந்த அணைகளின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. அதுவரை இருக்கும் நீரை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தினசரி கண்காணித்து வருகின்றனர்.இதற்கிடையில், பல கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில பகுதிகளில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் அளவு குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகரிக்கும் நிலையில், அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவது எதிர்காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் பாசனத்திற்கு பெரும் சவாலாக மாறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தேவையற்ற நீர் வீணாவதை தவிர்க்க வேண்டும், விவசாயிகளும் குறைந்த நீரில் பயிரிடும் முறைகளை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வரவிருக்கும் பருவமழை மட்டுமே பழனி வட்டார மக்களின் நீர் தேவைக்கு நம்பிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















