குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் பயணங்களில் அதிரடி மாற்றம்! பாதுகாப்பு, புதிய நிறுத்தங்கள் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 26-ம் தேதி முதல் சில முக்கிய ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.
பேருந்து, கார் என சொகுசாக பயணம் செய்தாலும் ரயிலில் பயணம் செய்வது போன்ற வசதி இருக்காது. அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பும் உள்ளதால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கவே விரும்புவார்கள். அந்த வகையில் தினந்தோறும் பல கோடி மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே ரயில் பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்து கொடுக்கும் வகையில் புதிய, புதிய திட்டங்களையும் ரயில்வே நிர்வாகமும் செயல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில் நிலையங்களை 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடியரசு தினவிழா நாளை திங்கள்கிழமை ஜனவரி 26ல் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை முதல் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் இருப்புப் பாதை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயிலுக்குச் செல்லும் பயணிகள், விரைவு ரயில்களில் செல்வோா் என அனைத்துத் தரப்பினரின் உடைமைகளும் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மெட்டல் டிடெக்டா் மூலம் பயணிகளின் பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவை சோதனையிடப்பட்டன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறநகா் செல்லும் ரயில்களின் பெட்டிகளிலும், விரைவு ரயில் பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா். மேலும், வருவாய்த் துறையினா், காவல் துறையினருடன் இணைந்து தண்டவாளப் பகுதி கண்காணிக்கப்படுவதாகவும் இருப்புப் பாதைப் பிரிவு போலீசார் தெரிவித்தனா்.
இதே நேரத்தில் ரயில் சென்று வருவதில் பல்வேறு நேர மாற்றங்களும் ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 26-ம் தேதி முதல் சில முக்கிய ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் பல்வேறு ரயில்களுக்கு புதிய ரயில் நிறுத்தங்களை ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது. இந்த புதிய ரயில் நிறுத்தங்களில் வருகிற ஜனவரி 26-ம் தேதி முதல் அந்தந்த ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் பல்வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ், புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் கடம்பூரிலும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி, தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும், பாலக்காடு-திருச்செந்தூர், திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டத்திலும், தூத்துக்குடி-ஓகா, ஓகா-தூத்துக்குடி இடையே விவேக் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி மேலூரிலும் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






















