50 ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மீட்பு... ஏலத்தில் விடப்பட்டன
ட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அங்கு இருந்த பாத்திரங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரிய வந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பூட்டிக்கிடந்த கட்டிடத்தில் இருந்து பல வகை பாத்திரங்கள் எடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி 1958-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் செடி, கொடிகள் மண்டிக்காணப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 2 கட்டிடங்கள் பூட்டியே கிடந்தன. இதைப்பார்த்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி அதனை சுத்தம் செய்து கட்டிடத்தில் என்ன உள்ளது என பார்வையிட உத்தரவிட்டார்.

அதன் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் செடி, கொடிகள், புதர்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் அங்கிருந்த கட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அங்கு இருந்த பாத்திரங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரிய வந்தது. அனைத்து பாத்திரங்களும் செம்பு, பித்தளை, அலுமினியங்கள் போன்றவற்றால் ஆனது. அனைத்து பாத்திரங்களும் அதிக எடையிலும், மிகப்பெரிய அளவிலும் இருந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் இது போன்ற பாத்திரங்களை பார்ப்பது என்பது அரிது.
இந்த நிலையில் தமிழக அரசு தூய்மை திட்டம் 4.0 என்ற திட்டத்தை தொங்கி உள்ளது. இந்த திட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் பழமையான, உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பொருட்கள், பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள், அட்டைப்பெட்டிகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறும், நல்ல விலை போகும் பொருட்களை ஏலமிடுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பாத்திரங்கள் பழமையானதாகவும், அரிதானதாகவும் இருந்ததால் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் வந்த ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பொருட்களில் அதிக விலை உடைய செம்பு பொருட்கள், அலுமினியம் மற்றும் பித்தளை பொருட்கள் என்று தெரிய வந்தது. மேலும் இவை அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என தெரிய வந்தது.
இதையடுத்து அரிதாக காணப்படும் அண்டா, இட்லி கொப்பரை, பால்கேன், கடாய், அலுமினிய டிபன்கேரியர், தண்ணீர் ஊற்றும் குவளை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அருங்காட்சியகத்தில் வைப்பது எனவும், மீதமுள்ள பொருட்களை ஏலமிடவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருட்களை தவிர மீதமுள்ள பொருட்கள் ஏலமிடப்பட்டன. இதன் மூலம் ரூ.9 லட்சம் மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்துள்ளது என்று முதல்வர் பூவதி தெரிவித்தார்.





















