சந்தைக்கு வந்து விட்டு திரும்பியபோது விபரீதம்: வாலிபர், மாணவர் பலி: பேராவூரணியில் சோகம்
சாலையைக் கடக்க முயன்ற போது மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிவராமன் மற்றும் அறிவுக்கரசு இருவரும் சிக்கினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே இன்று மாலை நடந்த சாலை விபத்தில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி யான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் சிவராமனின் உறவினர். இந்நிலையில் இன்று மாலை ராஜசேகரனின் மகன் ஆயங்குடி அரசு பள்ளி 7ம் வகுப்பு மாணவரான அறிவுக்கரசை (11) பேராவூரணி சந்தைக்கு தனது பைக்கில் சிவராமன் அழைத்து சென்றார்.
சந்தையில் பொருட்கள் வாங்கி விட்டு, மீண்டும் பைக்கில் தங்களின் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் சாலையைக் கடக்க முயன்ற போது மறுபுறத்தில் வந்த லாரியின் பக்கவாட்டில் பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் பின் சக்கரத்தில் சிவராமன் மற்றும் அறிவுக்கரசு இருவரும் சிக்கினர். இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த இருவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது பார்த்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பேராவூரணி போலீசார் தூத்துக்குடியில் இருந்து ஏற்றி வந்த உர மூட்டைகளை பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியில் இறக்கி விட்டு, காலி லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழசிறுபூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா என்பவர் மகன் லாரி டிரைவரி; சதீஷ் கண்ணன் (23) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















