திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. பழைய மின் கட்டண முறை அமலில் இருந்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தெரிவித்தோம் என வைஷாலி கூறியுள்ளார்.

மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளதாகவும், தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை திரும்ப பெறுமாறும் சீரியல் நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் அவர் மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த பிரச்னை தொடர்பாக மின்வாரிய அலுவகத்தில் இருந்து தொடர்புக் கொண்டு அதிகாரிகள் கேட்டபோது வைஷாலி தரப்பு சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் அவரை சமூக வலைத்தளங்களில் சரமாரியாக நெட்டிசன்கள் விளாசினர். இந்த நிலையில் தான் நடிகை வைஷாலி நேற்று தனது youtube பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த சர்ச்சை தொடர்பாக தனது கணவருடன் சத்யதேவுடன் சேர்ந்து விளக்கம் அளித்திருந்தார்.
மின் இணைப்பு எண்ணை கொடுக்கல
அப்போது, “நாங்கள் மின் கட்டணம் குறித்து புகார் தெரிவித்தவுடன் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. மின் இணைப்பு எண்ணை சொல்லுமாறு தெரிவித்தனர். எங்களுக்கு ஆதரவாக பேசி நிறைய செல்போன் அழைப்பும் வந்தது. அதனால் எங்களால் மின் இணைப்பு என்னை கொடுக்க முடியவில்லை. அதேசமயம் பலரும் நான் தவறை தைரியமாக வெளிக்காட்டி விட்டதாக பாராட்டு தெரிவித்தனர்.
நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது. பழைய மின் கட்டண முறை அமலில் இருந்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் தெரிவித்தோம். 500 யூனிட்டுக்கு உள்ளே பயன்படுத்தினால் 200 யூனிட் இலவசம் என இருக்கிறது. பத்தில் நான்கு பேருக்கு இந்த வகையில் அதிகமாக மின் கட்டணம் வருகிறது. அவர்களுக்காகத் தான் நாங்கள் பேசினோம்” என கூறினார்கள்.
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் பில்
தொடர்ந்து, “நாங்கள் மின் கட்டணம் விஷயம் மட்டுமல்லாமல் சமூகத்தில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் பற்றி கடந்த காலங்களில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளோம் என தெரிவித்தனர். அப்போது 2025 ஆம் ஆண்டு ஜூன் முதல் தற்போது வரை கட்டப்பட்ட மின்கட்டண தொகையையும் அவர்கள் வெளிக்காட்டினர். அதில் 2026 ஜனவரி மாதம் வரை அதிகபட்சம் 4,470 ரூபாய் பணம் கட்டியுள்ளனர்.
இதில் திமுக ஆட்சியில் இருந்த கடந்த மார்ச் மாதம் ரூபாய் 37,413 ரூபாய் மின் கட்டணமாக நடிகை வைஷாலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து என்னவென்று விசாரித்த போது அவர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்திருக்கும் மின்மீட்டரால் குறைவான தொகை தவறாக வருவதாக கூறி அதிகாரிகள் ஆய்வு செய்து பின் திருத்தப்பட்ட கட்டணத்தை ஓராண்டிற்கு சேர்த்து கட்டுமாறு அறிவுறுத்தியதன் விளைவாக இந்த தொகை வந்ததாக கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஜூன் மாதம் ரூ.11,975ம், ஆகஸ்ட் மாதம் 13,049 ரூபாயும் செலுத்தியுள்ளார்.. வைஷாலி வெளியிட்ட வீடியோவில் எங்களுக்கு அதிகமாக மின் கட்டணம் வந்துவிட்டது என பேசவில்லை. மற்றவர்களுக்கு அதிகமாக வந்துள்ளது என்பது குறித்து தான் பேசினோம். இது தொடர்பாக பேசினால் முதலமைச்சர் விஜய் வரை சென்று சேரும் என்பதால் அவர் பேசினார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நிறைய பேர் மின்வாரிய அலுவலகத்தில் சென்று அதிகமாக மின் கட்டணம் வந்தது குறித்து விசாரித்த போது சரியாக பதில் அளிக்கவில்லை என சொல்லப்பட்டது. அப்படி எத்தனை பேர் தான் சென்று விசாரிக்க முடியும் என்ற நிலையில் தான் இதில் ஒரு நடவடிக்கை தேவை என்பதன் அடிப்படையில் இந்த வீடியோவை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் ஒருவன் நான் என முதலமைச்சரின் விஜய் சொன்னதன் அடிப்படையில் தான் உரிமையுடன் இந்த வீடியோவை நாங்கள் வெளியிட்டோம் எனவும் சத்தியதேவ் மற்றும் வைஷாலி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















