தஞ்சாவூர் அருகே துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்
செல்லப்பன்பேட்டையில் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்றனர். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கணவன், மனைவி கார் மோதிய விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருகே வல்லம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் பி.மகாலிங்கம் (67). விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (62). இவர்கள் இருவரும் தங்கள் ஸ்கூட்டியில் நேற்று காலை செல்லப்பன்பேட்டையில் உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்றனர். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
வல்லம் பிரிவு சாலையில் திரும்பும் போது பின்னால் கேரளாவில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் மகாலிங்கம் ஓட்டி வந்த ஸ்கூட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாலட்சுமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மகாலிங்கம் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மகாலிங்கம் இறந்தார். இதையடுத்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ச.அர்ஜூன் (23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசு பஸ் மோதி 3 பேர் காயம்
தஞ்சாவூர் மேரீஸ் கார்னரில் பேருந்துக்காக பயணிகள் நிழற்குடையில் காத்திருந்த போது, நகர பேருந்து மோதியதில் மூவர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பழைய பேருந்து நிலையத்துக்கு அரசு நகர பேருந்து வந்தது. இந்த பேருந்து மேரீஸ் கார்னர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறமாக சென்றது. அப்போது பேருந்து நிறுத்தம் அருகில் பேருந்துக்காக காத்திருந்த மூவர் மீது பேருந்து மோதியது.
இதில் கீழவாசலைச் சேர்ந்த துரைராஜ் (54), அவரது மகன் அபிஷேக் (17) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சோனாலி(23) ஆகிய மூவரும் காயமடைந்தனர். இதில் துரைராஜின் இரு சக்கர வாகனம் பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்டு சேதமடைந்தது. மேலும் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த போக்குவரத்து போலீஸாரின் நிழற்குடையும் சேதமானது.
உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவ்விபத்து குறித்து தஞ்சாவூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.























