தஞ்சையில் திமுக வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குறுதிகள் மழையில் மக்கள் உற்சாகம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
திமுக வேட்பாளர் சண். ராமநாதன் திறந்த ஜீப்பில் பள்ளி அக்ரஹாரம் நடுத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, பெரிய தெரு, சின்ன தெரு, பழைய கும்பகோணம் ரோடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர்: தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார். செல்லும் இடமெல்லாம் அவரை பொதுமக்கள் உற்சாகத்துடன் அமோக வரவேற்பு அளித்தனர்.
தஞ்சை 1வது வார்டு பள்ளி அக்ரஹாரம் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வழிபட்ட திமுக வேட்பாளர் சண். ராமநாதன் தொடர்ந்து திறந்த ஜீப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளருடன் திமுக மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன், எம்.பி. முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மாமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாநகர தலைவர் மகேந்திரன், கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் அவை தலைவர் ஜிம் கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் சண். ராமநாதன் திறந்த ஜீப்பில் பள்ளி அக்ரஹாரம் நடுத்தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, பெரிய தெரு, சின்ன தெரு, பழைய கும்பகோணம் ரோடு, ஹரி நகர், வெண்ணாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் புடை சூழ சென்ற வேட்பாளர் சண். ராமநாதனுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சை மாநகரப் பகுதிகளில் நான் மேயராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலத்திட்டங்களை பெருமளவில் நிறைவேற்றி உள்ளேன். முக்கியமாக அடிப்படை வசதிகளில் அதிகம் கவனம் செலுத்தினேன். தஞ்சையின் அனைத்து பகுதிகளில் சாலை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. மாநகர் முழுவதும் சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு போக்குவரத்து நெருக்கடி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 30 ஆண்டுகள் குடிநீருக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை திட்டம் நன்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்னை சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இன்னும் தஞ்சை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவேன்.
தஞ்சை மாநகராட்சியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. முக்கியமாக மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை செயல்படுத்தி உள்ளது. இதுபோன்று மேலும் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு அவர் வாக்குறுதிகள் அளித்து பேசினார்.
தொடர்ந்து மாநகராட்சி 2, 3 வார்டுகளில் சண்.ராமநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார். அனைத்து பகுதியிலும் திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















