![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தஞ்சை கீழ ராஜவீதியில் மிகப்பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது
தஞ்சை கீழராஜவீதியில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் வயதுடைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.
![தஞ்சை கீழ ராஜவீதியில் மிகப்பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது Thanjavur accident: an old building in thanjavur is collapsed no deaths have been recorded yet TNN தஞ்சை கீழ ராஜவீதியில் மிகப்பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/07/1f0b302db5fbcebc4a1244a10302b07f1667802590699501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சை கீழராஜவீதியில் மிகவும் பழமையான நூற்றாண்டுகள் வயதுடைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை.
தஞ்சை கீழராஜவீதி மெயின் ரோட்டில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருப்பினும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் ஆகியவை செயல்பட்டு வந்தது. தற்போது அந்த கடையும் காலி செய்யப்பட்டு விட்டது. கடையின் பொருட்கள் மட்டும் உள்ளே இருந்தது.
தஞ்சை கீழ ராஜ வீதி எப்போதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படும், காலை, மாலை வேளைகளில் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். தினமும் ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள் சென்று வரும் மிக முக்கியமான பகுதியாகும். மேலும் அரண்மனைக்கு இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது 2 நாட்களாக மழை இல்லாமல் உள்ளது. இந்த கனமழையின் காரணமாக இந்த பழமையான கட்டிடம் நனைந்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென இந்த கட்டிடம் இடியத் தொடங்கியது.
மேலும், அதன் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விழுந்தன. சிறிது நேரத்தில் கட்டிடத்தின் பக்கவாட்டில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இதற்கிடையே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு கொண்டிருந்தவர்கள் கிழக்கு போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். தொடர்ந்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இரவு நேரம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் கீழ ராஜ வீதியில் கட்டிடம் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழமையான இந்த கடம்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைந்து மீதமுள்ள கட்டிடத்தையும் இடிக்க வேண்டும். இதேபோல் தஞ்சை நகரில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டிடங்கள் எங்கெங்கு உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)