தஞ்சையில் புதுமை பெண் திட்டம்....3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை..!
தஞ்சை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார். மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு நிதி உதவியை வழங்கி அதற்கான வங்கி ஏடிஎம் கார்டுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து தஞ்சாவூரில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில், முதல்வரின் நிகழ்ச்சி காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. பின்னர் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எம்.எல்.ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து முதற்கட்டமாக ப்ளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகிய 12 கல்லூரிகளில் பயிலும் 472 மாணவிகளுக்கு உடனடியாக, அந்த மாணவிகளின் வங்கி கணக்கு, அதற்கான ஏடிஎம் கார்டுகள் ஆகியவை வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவிகள் சிலர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்ட நடமாடும் ஏடிஎம் இயந்திரங்களில் தங்களது வங்கி கணக்குக்கு பணம் வந்துள்ளதா என சரிபார்த்தும், சில மாணவிகள் ரூ.1000 ரொக்கப்பணத்தையும் எடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,765 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில் தற்போது 472 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவிகள் உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்கி அதற்கான ஏடிஎம் கார்டு, உயர்கல்வி வேலை வாய்ப்பு மலர், விழிப்புணர்வு கையேடு ஆகியவையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மாணவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1000ம் நிதி சென்றுவிடும். இந்த நிதியைக் கொண்டு மாணவிகள் தங்களது உயர் கல்விக்கு தேவையான செலவை செய்து கொள்ளலாம் என்றார்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















